சென்னை: 

ங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்த் (தேமுதிக):

தமிழக மக்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது-

தமிழகத்தில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய மூன்றும் மக்கள் அனைவருக்கும், உறுதியாக கிடைத்திட வேண்டுமென எனது இதயப்பூர்வமான புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தேமுதிக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருநாவுக்கரசர்(காங்கிரஸ்): புத்தாண்டில் வறுமை, அறியாமை, தீவிரவாதம், வன்முறை அகன்று, மதச்சார்பற்ற நிலை தொடர்ந்து நிலைத்து, சகோதரத்துவம் தழைத்தோங்கி, வேலை வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் உயர்ந்து அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகி, மக்கள் மகிழ்வுடன் வாழ உளமாற வாழ்த்துவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

வைகோ (மதிமுக): ஜனநாயகம் வழங்கியுள்ள வலிமையான ஆயுதமான வாக்குச் சீட்டை பணத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் பலியாக்கி விடாமல், வாக்குரிமையைப் பயன்படுத்தும் கடமை ஆற்றிட தமிழக வாக்காளர்கள் இப்புத்தாண்டு நாளில் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பனிக்காலத்திற்குப் பின்னர் வசந்தம் என்ற உணர்வோடு நம்பிக்கைக் கொண்டு நம் அனைவருக்கும் புதுவாழ்வும், புத்தெழுச்சியும், புது வளர்ச்சியும் வழங்கிடும் ஆண்டாக இவ்வாண்டு அமைந்திடட்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஜி.கே.வாசன் (தமாகா): புதிய ஆண்டில் இந்தியர்களாகிய நமக் கெல்லாம் நற்பயன்களை தரும் என்ற நம்பிக்கையோடு இனிதே வரவேற்போம். புத்துணர்ச்சியோடு, புதுப்பொலிவோடு வாழ நல்வழிகள் அமைய வேண்டும். தாய்த்தமிழ் வளர்ந்து, தமிழ் மக்கள் நல்வாழ்வு வாழ்ந்து, தமிழகம் செழித்து, நாடு வளர வாழ்த்துவதாக வாசன் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் (பாமக): 2018-ம் ஆண்டை ஊழல் எதிர்ப்பு ஆண்டாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து மக்களும் கடைபிடிக்க வேண்டும். தமிழகத்தில் மாற்றம், முன்னேற்றத்தை அடைய இப்போதிலிருந்தே உழைக்க இந்த ஆங்கிலப் புத்தாண்டு நாளில் தமிழக மக்கள் அனைவரும் சபதம் ஏற்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முயல்வது நாட்டின் அடிப்படை கொள்கைகளுக்கும், அரசியலைப்பு சட்டத்திற்கும் புறம்பான முறையில் செயல்படுவது நம்மை பின்னோக்கி இழுக்கும் முயற்சியாகும்.

மக்கள் ஒற்றுமை காக்க அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்திட அனைவரும் உறுதிபூண்டிட வேண்டுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

ஜி.ராமகிருஷ்ணன்(மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): ஒவ்வொரு ஆண்டும் பிறக்கிற பொழுது புதிய நம்பிக்கைகளும் பிறக்கின்றன. கடந்து செல்லும் ஆண்டு பல்வேறு அனுபவங்களை விட்டுச் செல்கிறது. அனுபவங்களை அடியுரமாக்கி புதிய நம்பிக்கை பூ மலரட்டும் என தெரிவித்துள்ளார்.