சென்னை: அரசியல் நிலைப்பாட்டை பற்றி உறுதியாக எதையும் அறிவிக்காத ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து பேசியிருக்கிறார் தமிழருவி மணியன்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து தமது மக்கள் மன்ற வட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், தமது அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்று அறிவித்தார். இந் நிலையில், போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று ரஜினிகாந்தை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன்  சந்தித்து பேசினார்.

நீண்ட நேர சந்திப்புக்கு பின் தமிழருவி மணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நேற்றைக்கு முன் தினம் ரஜினி மக்கள் இயக்கத்தைச் சார்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் ஆலோசனை நடத்தினார். அதன் அடிப்படையில் ஒரு சகோதரனாக இன்று அவரை சந்தித்தேன்.

வேறு எதுவும் சொல்வதற்கு என்னிடம் செய்தி இல்லை. அவர் உடல்நிலை பற்றி அவர் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களிடம் எதையும் மறைத்து வாழ ரஜினிகாந்துக்கு அவசியமில்லை.

அவருடைய வாழ்க்கை திறந்த புத்தகம். நான் அவரிடம் என்ன சொன்னேன் என்பதை தற்போது என்னால் சொல்ல முடியாது. நான் உங்களது உடல் நலம் தாம் முக்கியம், அதனை பார்த்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தேன். அத்துடன் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கேள்விக்கு பதில் அளிக்க  வேண்டாம் என்று ரஜினி கூறியுள்ளார் என்றார்.