மாமல்லபுரம்
தமிழகம் மற்றும் சீனாவின் ஃபுஜியன் பகுதி ஆகிய இரண்டும் இனி சகோதர பகுதிகளாகக் கருத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இருவரும் சென்னை அருகில் உள்ள மாமல்லபுரத்தில் இரு நாட்கள் சந்திப்பை நிகழ்த்தினர். இது பல உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான இந்த சர்வதேச சம்மேளனம் சென்னை தொடர்பு என அழைக்கப்படுகிறது.
இந்த சந்திப்பில் இந்திய சீன உறவு குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடி உள்ளனர். மாமல்லபுரத்துச் சிற்பங்களைக் கண்டு ரசித்த சீன அதிபர் தங்கள் நாட்டில் உள்ள ஃபுஜியன் மாகாணத்தை நினைவு கூர்ந்துள்ளார். ஏற்கனவே இந்தியாவின் அஜந்தா குகை மற்றும் சீனாவின் துன்ஹுவாங் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள தொடர்புகள் குறித்து ஆய்வு நடைபெறுகிறது.
இதைப் போல கற்சிற்பங்கள் அதிகம் உள்ள சீனாவின் ஃபுஜியன் மாகாணம் மற்றும் மாமல்லபுரம் ஆகியவை ஒற்றுமையுடன் உள்ளதால் இரு பகுதிகளையும் இவ்விரு தலைவர்கள் சகோதரிகள் என அழைக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் இந்திய சீன உறவை மேம்படுத்த வரும் 2020 ஆம் ஆண்டு பல கலாச்சார நிகழ்வுகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
இரு நாடுகளுக்கு இடையில் ஆன கலாச்சார உறவுக்கு 70 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில் 70 விதமான நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன. இவற்றில் இரு நாடுகளுக்கு இடையில் ஆன கப்பல் பயணம் ஒன்றும் இடம் பெற உள்ளது. அத்துடன் இரு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் ஒவ்வொரு வாரமும் சீனா அல்லது இந்தியாவில் நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர்.