முதல்வர் ஓ.பி.எஸ். அளித்த ஜெயலலிதா சமாதி இரவுப்பேட்டி, தமிழக அரசியலையே புரட்டிப்போட்டிருக்கிறது.

“அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் நிர்ப்பந்தப்படுத்தித்தான் தன்னிடமிருந்து ராஜினாமா கடிதத்தை வாங்கினார்கள்.  அ.தி.மு.க. மற்றும் நாட்டு நலனுக்காக இக் கட்சிக்கு சரியான நபர் தலைமையேற்க வேண்டும். அதற்காக தன்னந்தனியனாக போராடுவேன்” என்று சொல்லியிருக்கிறார்.

இது குறித்து அரசியல் வட்டாரத்தில் கிளம்யிருக்கும் யூகம் இதுதான்.

போராட தயாராக இருக்கும் ஓபி.எஸ்., தான் அளித்த ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவார். ஏனென்றால் எம்.எல்.ஏக்கள், கட்சி முக்கிய பிரமுகர்கள்தான் சசிகலா பக்கம் இருக்கிறார்கள். தொண்டர்களும், மக்களும் சசிகலாவை விரும்பவில்லை என்பது அனைவரும் அறிந்த விசயம். ஆகவே  ஓ.பி.எஸ். பக்கம்தான் பெரும்பாலோர் இருக்கிறார்கள்.

ஆகவே ஒரு கை பார்ப்போம் என்று அவர் முடிவெடுத்துவிட்டார். ஆகவே, அவர் தனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவார்.

அதே நேரம், தன்னைப் பற்றி பகிரங்கமாக குற்றம்சாட்டிய ஓ.பி.எஸ்ஸை சசிகலாவோ, அவரது தரப்பினரோ மன்னிக்கப்போவதில்லை. அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க, தங்கள் வசம் இருக்கும் எம்.எல்.ஏக்கள் மூலம் முயல்வார்கள்.

ஆனால் இதுவரை அமைதியாக இருந்த அனைத்து எம்.எல்.ஏக்களும் அப்படியே  இனி இருப்பார்கள் என சொல்ல முடியாது. தைரியம் வந்து சில பலர் ஓ.பி.எஸ். பக்கம் வரலாம்.

அப்படியான சூழலில் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்டாயம் ஏற்படும். அந்த நேரத்தில் ஓ.பி.எஸ்ஸுக்கு முட்டுக்கொடுப்பதாய் தி.முக.சொல்லக்கூடும். ஆனால் சட்டசபைியல் இது குறித்து வாக்கெடுப்பு நடக்கும்போது வேறுமுடிவை திமுக எடுக்கலாம்.

அது போன்ற நிலையில், யாருக்கு பெரும்பான்மை என்பதே தெரியாத குழப்பமான சூழ் ஏற்படும். அப்போது சட்டசபையை கலைக்கவேண்டியிருக்கும்.

இதை தி..மு.கவும் விரும்பும். ஏனென்றால், பொதுத்தேர்தலில் தனக்கு வாய்ப்பு வரும் என்ற நம்பிக்கை அக் கட்சிக்கு இருக்கிறது.

இன்னொரு புறம், இத்தகைய குழப்பங்கள் நீடிப்பதை விட, கலைத்துவிட்டு தேர்தலை நடத்தலாம் என்பதையே பாஜகவும் விரும்பும்.  ஓ.பி.எஸ். அணியுடன் கூட்டணி வைத்தால் தமிழகத்தில் காலூன்றலாம் என்ற கனவு பாஜகவுக்கு இருக்காது என்று சொல்வதற்கில்லை.

ஆக.. விரைவில் தற்போதைய ஆட்சி கலைக்கப்படும் சூழல் ஏற்படும்” – இதுதான் தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்த யூகம்.