சென்னை: பிரபல டாக்டர் திருவேங்கடம் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: பிரபல மருத்துவரும், மருத்துவத் துறையில் பேராசிரியராகவும் பணியாற்றிய மருத்துவர் கே.வி. திருவேங்கடம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர், நேற்று (அக். 3) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
மருத்துவர் திருவேங்கடம் மருத்துவக் கல்லூரி பேராசிரியராக சுமார் 31 வருடங்கள் பணியாற்றியவர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவியல் ஆலோசனை குழுவின் உறுப்பினராககவும் பணியாற்றியவர். மத்திய அரசு இவரது சேவையினை பாராட்டி இவருக்கு பத்மஸ்ரீ வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி, சிறந்த மருத்துவ பேராசிரியருக்கான டாக்டர் பி.சி ராய் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளின் சொந்தக்காரர். மருத்துவர் திருவேங்கடம், தனது கடின உழைப்பாலும், திறமையானலும் மருத்துவத்துறையில் தனி முத்திரை பதித்தவர். அவரின் மறைவு மருத்துவத்துறைக்குப் பேரிழப்பாகும்.
மருத்துவர் திருவேங்கடத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மருத்துவத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.