சென்னை:
ரானில் சிக்கியுள்ள மீதமுள்ள மீனவர்களையும் மீட்க வேண்டும் என தமிழக முதல்வர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு  கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கையாக  இந்தியா உள்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனால் அனைத்துவிதமான பொது போக்குவரத்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கொரோனா  ஊரடங்கால் பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் ‘ஆபரேசன் சமுத்திர சேது’ திட்டத்தின் கீழ் தாய் நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
அதன்படி முதல்கட்டகமா கடந்த மாதம்,  ‘ஐஎன்எஸ் ஜலஸ்வா’ கப்பல் மூலம் ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து, அங்கு சிக்கித் தவித்த தமிழகம் மற்றும் கேரள மீனவர்கள் 687 பேர் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு  மருத்துவப் பரிசோதனை மற்றும் குடியுரிமை சோதனை முடிந்த பிறகு கப்பலில் வந்த அனைவரும் அரசு பேருந்துகளில் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், ஈரானில் மேலும் 40 தமிழக மீனவர்கள், அங்கிருந்து  வெளியேற முடியாத நிலையில் உள்ளனர். கடந்த மாதம் சென்ற கப்பலில் இடம் இல்லாததால் அவர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்படவில்லை. அதனால்,  அவர்கள் 40 பேரையும் விரைவில் அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யும்படி மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.