சென்னை:

தொழிற்துறையில் தமிழகம் மிகவும் சிறந்து விளங்குகிறது  என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதமாக தெரிவித்து உள்ளார்.

டிஎல்எஃப் நிறுவன கட்டுமான பணி அடிக்கல் நாட்டுவிழா இன்று தரமணியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பேசிய முதவல் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான ஒற்றை சாளர அனுமதி முறைக்கு நல்ல வரவேற்பு உள்ளது மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்  என்று தெரிவித்தார்.

சென்னை தரமணியில் ஐ.டி. நிறுவனங்களுக்காக ரூ.5 ஆயிரம் கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய வளாகத்திற்கு இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். டிட்கோ – டிஎல்ப் நிறுவனங்கள் இணைந்து 27.04 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த வளாகத்தை உருவாக்குகிறது. இதன் மூலம் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி தமிழக முதல்வர் எடப்பாடி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் இன்னொரு மைல்கல்லாக டிட்கோ மற்றும் டி.எல்.எப். நிறுவனம் இணைந்து உருவாக்கவிருக்கும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் அதனைச் சார்ந்த பணிகளுக்கான டவுன் டவுன் சென்னை வளாகத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

டிட்கோ மற்றும் டி.எல்.எப். இரண்டும் இணைந்து மேற்கொள்ளும் டி.எல்.எப். டவுன் டவுன் சென்னை கூட்டு முயற்சிக்கான திட்டத்துக்கு ஐ.டி. மற்றும் ஐ.டி. ஈ.எஸ். நிறுவனங்கள் இயங்க (ஒரே கூரையின் கீழ்) அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று இந்தப் புதிய உதயத்தை உருவாக்கி இருக்கும் ஒவ்வொருவரையும் நான் பாராட்டுகிறேன்.

மாநிலத்தில் மேலும் தொழில்துறை வளர்ச்சிக்கு அதன் மேம்பாட்டுக்கு ஆக்கப்பூர்வமான முறையில் அனைத்து முன்னணி நிறுவனங்களோடு புரட்சித்தலைவி அம்மாவின் அரசு எப்படி இணைந்து செயல்படுகிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் உதாரணம்.

என்னுடைய அரசின் தீவிரமான தொடர் முயற்சிகள் காரணமாக, தமிழ்நாட்டில் பல புதிய முதலீட்டு திட்டங்கள் துவக்கப்பட்டு வருகின்றன. ஓராண்டு காலத்துக்குள் 59 ஜி.ஐ.எம் திட்டங்களின் வணிக ரீதியிலான உற்பத்திக்கு நம்மால் ஆதரவளிக்க முடிந்திருக்கிறது. மேற்கொண்டு 213 திட்டங்கள், அமுல்படுத்தும் பல்வேறு நிலைகளில் உள்ளன.

அரும்பும் வேர்வை உதிர்த்துப் – புவி மேல் ஆயிரம் தொழில் செய்திடுவீரே

என்றார் மகாகவி பாரதியார். இவரது பாடல் வரிகளுக்கு ஏற்ப, புரட்சித்தலைவி அம்மாவின் அரசு மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளால் பல புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாடு தொடர்ந்து ஈர்த்து தொழில் துறையில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இரண்டாம் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்ற ஒரே ஆண்டில் 59 திட்டங்கள் தங்கள் வணிக உற்பத்தியைத் துவக்கியுள்ளன. மேலும், 213 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன.

வெற்றிகரமாக நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்குப் பிறகு, இதுவரை 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 63 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 83 ஆயிரம் வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்பட உள்ளன.

தமிழகத்தை உலகளவில் உற்பத்தி மையமாக மாற்றும் தொலைநோக்குடன் நான் செயல்பட்டு வருகிறேன். இந்த லட்சியத்தை நிறைவேற்றும் முனைப்பில், எனது அரசு ஏற்கனவே ஈடுபட்டுள்ளது. சிறந்த ஆட்சி நிர்வாகம் மூலம் இந்தத் தொலைநோக்கு நிறைவேறும் என்பதில் எனது அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. இந்திய மாநிலங்களில் ஒரு புதிய வளர்ச்சியின் முன்மாதிரியான தமிழகத்தை மாற்றுவதில் எனது அரசு உறுதி பூண்டுள்ளது” என்றார் புரட்சித்தலைவி அம்மா.

அம்மாவின் வழியில் செயல்படும் எனது அரசும், தமிழ்நாடு தொழில் துறையில் சிறந்து விளங்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.

* தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேலும் சிறப்பாக்கும் பொருட்டு உலகெங்கும் வாழ்ந்து வரும் தமிழர்களின் சீரிய ஆலோசனைகளை பெறவும், தமிழ்நாட்டில் தொழில் துவங்க முன் வரும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கவும், ‘‘யாதும் ஊரே” என்ற புதிய திட்டத்தை நானே நேரடியாகச் சென்று அமெரிக்காவில் துவக்கி வைத்தேன். இந்தப் பயணத்தில், இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளிலும், துபாயிலும் உள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, அதன் மூலம் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டன. இதனால் 35 ஆயிரத்து 520க்கு மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. மேற்படி ஒப்பந்தங்களில் 5 நிறுவனங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

* தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டம் மூலம் ஒற்றைச் சாளர அனுமதிகளை நேரடியாகக் கண்காணித்து விரைவுபடுத்திட, எனது தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் மூலம் இதுவரை 14 ஆயிரத்து 728 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 36 தொழில் திட்டங்களுக்கு பல்வேறு அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன. 22 ஆயிரத்து 763 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் விரைவில் உருவாக்கப்பட உள்ளன.

* மேலும், முதலீடு செய்வதை எளிதாக்குதல் பிரிவு, எனது அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

* பாதுகாப்பு மற்றும் வானூர்தி தொழில் பூங்கா, மின்சார வாகனப் பூங்கா ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன.

* ஸ்டார்ட் – அப் எனும் புத்தொழில்களை ஊக்குவிக்க தனிக் கொள்கை, தகவல் தொழில்நுட்பக் கொள்கை, வானூர்தி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கை என தொழில் துறை மேம்பட பல்வேறு கொள்கைகளை வகுத்து, திட்டங்களை செயல்படுத்தி அம்மாவின் அரசு வெற்றி கண்டு வருகிறது.

* குவைத் நாட்டைச் சார்ந்த அல் கராஃபி என்ற நிறுவனம் தூத்துக்குடியில் 49 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் சுற்றுச்சூழலுக்கு உதந்த BS – SIX பெட்ரோலியப் பொருட்களைத் தயாரிக்கும் ஒரு நவீன பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி தொழிற்சாலையை துவக்க உள்ளது. இதன் மூலம், சிங்கப்பூர் நாட்டின் ஜுராங்க் தீவு, குஜராத்தில் உள்ள ஜாம் நகர் மற்றும் தஹேஜ் போன்ற பகுதிகளில் ஏற்பட்ட வளர்ச்சியைப் போல, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களும் சிறப்பான வளர்ச்சியைப் பெறும்.

இது தவிர, உலகின் மிகப் பெரிய மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பிஒய்டி, மாபெரும் மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான விங்டெக் ஆகிய நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தங்களது புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள உள்ளன.

* தொழில் சிக்கல்கள் காரணமாக மூடப்பட்ட நோக்கியா நிறுவன தொழிற்சாலையினை வாங்கி, மின்னணு சாதன உற்பத்தியினை மேற்கொள்ள சால்காம் நிறுவனம் உடன்பாடு செய்துள்ளது.

* இவ்வாறு, முந்தைய காலங்களில் பல்வேறு காரணங்களால் செயல்படாமல் நின்ற தொழில் நிறுவனங்கள் கூட, தற்போது என்னுடைய அரசின் தொடர் முயற்சிகளால் புத்துயிர் பெறும் சிறப்பான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

* அதே போல, இந்த அரசின் நல்லாட்சிக்கு ஒரு அத்தாட்சியாக வேளாண்மை, தொழில், மனித வள மேம்பாடு, பொது சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள், சமூக நல திட்டங்கள் உள்ளிட்ட பத்து துறைகளில் எடுத்துக் கொள்ளப்பட்ட ஐம்பது குறியீடுகளின் அடிப்படையில், 2019-க்கான மத்திய அரசின் நல் ஆளுமை குறியீட்டு அறிக்கையில் தமிழ்நாடு முதலாவதாக வந்து சாதனை படைத்துள்ளது.

* தமிழ்நாட்டில் அன்னிய நேரடி முதலீடு கடந்த ஆண்டுகளில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் என இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் அது ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது சுமார் 47 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டினை அம்மாவின் அரசு கூடுதலாக ஈர்த்துள்ளது என்பதை இங்கே பெருமையுடன் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

* நாட்டின் முன்னணி இதழான ‘இந்தியா டுடே’ நடத்திய ஆய்வில் ஒட்டுமொத்த செயல்பாட்டில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தொடர்ந்து இரண்டாவது முறையாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

* பிராஸ்ட் அண்ட் சல்லிவன் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் ஒட்டு மொத்த செயல்பாட்டில் இரண்டாம் இடத்தை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தமிழ்நாடு பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் ஐ.டி. தொழில் பிரிவு நிரந்தர வளர்ச்சி கண்டு வந்திருக்கிறது. ‘சாப்ட்வேர் – ஒரு சர்வீஸ்’ என்னும் தொழில் பிரிவுப் பகுதியில் தமிழ்நாடு இந்தியாவின் தலைமையாக இருந்து வருகிறது. பரந்த தொழிற்துறை அடித்தளம், உயர் தேர்ச்சி பெற்ற கல்வித்தகுதி உள்ள மனித சக்தி, நன்கு மேம்பாடு கண்ட அடிப்படை கட்டமைப்பு வசதி, உபரி மின்சார நிறுவனம் ஆகியவையே மாநிலத்தின் வல்லமைக்கு முக்கிய காரணமாகும்.

நாட்டில் இயங்கி வரும் விசேஷ பொருளாதார மண்டலங்களில் அதிக எண்ணிக்கையில் இருப்பதும் தமிழ்நாட்டில் தான். இதேபோல மிகப்பெரிய அளவில் ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில் நாட்டில் 3ம் இடத்தில் இருப்பதும் தமிழ்நாடு தான்.

பல்வேறு துறைகளைப் பொறுத்தமட்டில் தமிழ்நாடு மாநிலம் தொடர்ந்து புதிய முதலீடுகளைப் பெற்று வருகிறது. சமீபத்தில் டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனங்களின் முதலீடுகள் மட்டுமே மாநிலத்தில் ஐ.டி. துறையில் 31,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை இன்று இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் என்று கூறுகின்ற அளவிற்கு பல புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. மிகப் பெரிய நிறுவனங்கள் தங்களுடைய கிளைகளை சென்னையில் திறந்துள்ளன. மற்ற நிறுவனங்களும் தங்கள் அலுவலகங்களை சென்னையில் தொடங்க விரும்புகின்றன.

எனவே பல்வேறு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய தொழில்நுட்ப அலுவலகங்களை சென்னை யில் அமைப்பதற்கு வசதியாக மற்றொரு பெரிய வளாகம் அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் டிட்கோவும், டி.எல்.எப். நிறுவனமும் கூட்டாக இணைந்து சென்னை, தரமணியில் 27.04 ஏக்கர் நிலப் பரப்பில் 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களுக்கான, பல்வேறு நவீன வசதிகளுடன் ஒரு வளாகத்தினை அமைக்க உள்ளது. இதன் மூலம் 70 ஆயிரம் நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாக்க வாய்ப்பு உள்ளது.

வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப, ஐ.டி. தொழில்துறையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மெட்ரோ திட்டம் II, ஓ.எம்.ஆர். சாலை விஸ்தரிப்பு, கேளம்பாக்கம் – திருப்போரூரில் பைபாஸ்கள் மற்றும் முக்கிய சந்திப்புக்களில் மேம்பாலங்கள் ஆகியவை ரூ.1150 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டிட்கோ – டிஎல்ப் நிறுவனங்கள் இரண்டும் இணைந்து மேற்கொண்டிருக்கும் இந்தப் புதிய திட்டம், தெற்கு ஆசியாவில் முதலீட்டுக்கான மிகமிக விரும்பக்கூடிய திட்டம் என்று உணர்ந்தறியப்பட்டு, தமிழ்நாட்டின் நிறுவனம் இன்னும் வலிமைப்படுத்தி உயர்த்தி நிறுத்தும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

டிட்கோ – டிஎல்ப் இரண்டு நிறுவனங்களுக்கும் குறித்த காலத்தில் வெற்றிகரமாக இத்திட்டத்தை நிறைவேற்று வதற்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழில் முதலீட்டாளர்களை இருகரம் நீட்டி வரவேற்கும் அரசு அம்மாவின் அரசு. அவர்கள் தொழில் தொடங்க அனுமதி மற்றும் அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் குறுகிய காலத்தில் வழங்குவதும் அம்மாவின் அரசுதான். இதன் மூலம் தமிழ்நாடு இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் முதல் மாநிலமாக உயரும் என்பதை உறுதிபட இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் தொழில் நிறுவனங்களின் தலைவர்களுக்கு தமிழ்நாட்டில் உங்களது முதலீடுகள் அனைத்துக்கும் நாங்கள் முழு ஆதரவையும், உதவிகளையும் தொடர்ந்து அளிப்போம் என்று உறுதி கூறுகிறேன்.

இந்த விழாவினை நல்ல முறையில் ஏற்பாடு செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது வாழ்த்துகளை யும், பாராட்டுதல்களையும் தெரிவித்து விடைபெறுகிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், டிட்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் காகர்லா உஷா, டி.எல்.எப். நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்ரீராம் கட்டார், டி.எல்.எப். நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மோஹித் குஜ்ரால் மற்றும் தொழில் அதிபர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.