சென்னை: கொரோனாவை எதிர்த்து போராடும் வகையில் தமிழக அரசு தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அயர்லாந்தில் டப்ளின் நகரில் இருந்து வந்த எம்பிஏ மாணவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கைகள் அமலுக்கு வந்துள்ளன. அது தொடர்பாக தமிழக அரசு புதிய நடவடிக்கைகளை வெளியிட்டது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் விவாதிக்கப்பட்டு, வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. அதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டல்களை வெளியிட்டு உள்ளார்.

அவர் கூறி இருப்பதாவது: தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளுடன் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவமனைகள் உள்ளன. வீடியோ அழைப்புகள் மூலம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்க அரசு மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

வாராந்திர சந்தைகள் மார்ச் 31 வரை மூடப்படும்.  ஐடி நிறுவனங்கள், சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்கள் பணியாளர்களை குறைத்து, அவர்கள் மத்தியில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை பரப்ப வேண்டும்.

பெரிய ஜவுளி கடைகள், நகைக் கடைகள் மற்றும் ஹைப்பர் மார்க்கெட்டுகள் வெள்ளிக்கிழமை முதல் மூடப்படும். பெரிய கோயில்களில் பொது தரிசனம் மார்ச் 31 வரை நிறுத்தி வைக்கப்படும். இருப்பினும், வளாகத்திற்குள் பிரார்த்தனைகள் மற்றும் சடங்குகளை தொடரலாம்.

பெரிய தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் வழிபாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும். உள்நாட்டு விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் தீவிரமான திரையிடல் செயல்முறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

மாநிலங்களுக்கு இடையேயான ரயில்கள் மற்றும் பேருந்துகளின் எண்ணிக்கை கடுமையாக குறைக்கப்பட வேண்டும். ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பிற பொதுப் பகுதிகளில் கொரோனாவை எதிர்த்து, ஒரு நாளைக்கு மூன்று முறை கிருமிநாசினிகளால் தெளிக்கப்படுகின்றன.