சென்னை: வரும் 7ம் தேதி முதல் தமிழகத்தில் உயர்கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு  வெளியிட்டு உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த உயர்கல்வி நிறுவனங்கள் வரும் 7ம் தேதி முதல் திறக்கலாம் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந் நிலையில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:  முகக்கவசம் அணிந்தபடியே 50 சதவிகிதம் மாணவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும்.

வாரத்தில் 6 நாள்களுக்கு கல்லூரிகள் செயல்படும். தொற்று அறிகுறிகள் இருக்கும் மாணவர்களுக்கு அனுமதியில்லை. கல்லூரி விடுதியில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க வேண்டும். கல்லூரிக்கு அருகேவுள்ள உறவினர்கள் வீட்டில் மாணவர்கள் தங்கிக்கொள்ளலாம் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.