சென்னை: தமிழக அரசின் ஒப்பந்த பண்ணைய சட்டத்தால், ஒரு விளை பொருளின் விலை வீழ்ச்சியானாலும், விவசாயிக்கு பொருள் இழப்போ அல்லது பண இழப்போ ஏற்படாது.

ஒப்பந்த சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளின் நலன்களை காக்க, சட்டம் இயற்றப்படும் என்று 2018-2019ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு வேளாண் விளைபொருள், கால்நடை ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் சட்ட முன்வடிவு கடந்த பிப்ரவரி 14ம் தேதி சட்டசபையில் ஒப்புதல் பெறப்பட்டது.

அந்த சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் ஒப்புதல் அளிக்க, அரசிதழிலும் வெளியிடப்பட்டு விட்டது. ஆனால் அதில் உள்ள அம்சங்கள், சிறப்புகள், கிடைக்க போகும் பயன்கள் என்ன என்பதை விவசாயிகள் அறிந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அம்சங்கள் வருமாறு: நாடு முழுவதும் ஒப்பந்த சாகுபடிக்கு என்று தனியாக எந்தச் சட்டமும் எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழக அரசு தான் இப்போதைக்கு இதற்கு முன்னோடியாகும்.

ஒப்பந்தப் பண்ணையச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள கொள்முதலாளா், அந்தப் பகுதியைச் சோ்ந்த வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையால் அனுமதிக்கப்பட்ட அலுவலரிடம் பதிவு செய்து கொள்ளலாம்.

அதற்காக, தமிழ்நாடு ஒப்பந்த பண்ணையம் மறறும் சேவைகள் துறையில் 6 பேர் கொண்ட குழுவானது, இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது, பரிந்துரைப்பது ஆகிய நடவடிக்கைளில் மாநில அரசுக்கு துணையாக இருக்கும்.

கொள்முதலாளா் அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் விவசாயிகள் ஒப்பந்தம் செய்து, அப்போதைய விலையையே,  நிர்ணயிக்கும் வகையில் இருக்கிறது. விவசாயிகளுக்கு போதிய ஆதரவும், ஒத்துழைப்பும் அளிக்கப்படும்.

எந்த பொருளாவது, மாநில அல்லது மத்திய அரசு அல்லது இந்திய வேளாண் அறிவியல் கழகத்தால் தடை செய்யப்பட்டு இருந்தால், அவை ஒப்பந்த பண்ணையத்தின் கீழ் வராது. இது தொடர்பான விதிகளை விரைவில் இறுதி செய்யுமாறு அதிகாரிகளை தமிழக அரசு ஏற்கனவே அறிவுறுத்தி இருக்கிறது.

இந்த ஒப்பந்த நடைமுறை குறித்து ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி கூறியிருப்பதாவது: விவசாயிகள், வேளாண் தொழிலை சார்ந்த நிறுவனங்கள் இடையே ஏற்படுத்தப்போகும் முன்னேற்றங்களை பற்றியே ஆராயும்.

விவசாயிகளுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு தீர்வு காண வருவாய் கோட்ட, மாவட்ட மற்றும் மாநில அளவில் அமைப்புகள் ஏற்படுத்தவும் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த சட்டம், ஒப்பந்த விவசாயத்தை தடை செய்வதற்காக அல்ல. மாறாக, விவசாயத்தை சந்தைப்படுத்துதலுக்கான ஒரு முக்கிய சீர்திருத்த நடவடிக்கையாகும். அதாவது, அதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி ஏற்படும் நேரங்களில், புதிய சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்தவித பொருள் அல்லது பண இழப்பும் ஏற்படாது. முன்னரே ஒப்பந்தம் செய்த விலையில் பொருள்களை விற்கலாம் என்றார்.