தமிழகத்தில் எஸ்.பி, ஏ.எஸ்.பி பொறுப்பு வகிக்கும் 34 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிவிப்பாணை வெளியிட்டுள்ள தமிழக அரசு, நெல்லை மாவட்ட எஸ்.பி அருண் சக்திகுமார், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும், ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமார் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது. அத்தோடு, ஏ.எஸ்.பி ராஜேஷ் கண்ணன் எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று, புளியந்தோப்பு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தேனி மாவட்ட எஸ்.பியாக சாய் சரண், நீலகிரி மாவட்ட எஸ்.பியாக சசிமோகன் ஆகியோர் நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியாக இருந்த செல்வராஜ், காவல்துறை பயிற்சி அகாடமிக்கு மாற்றம் செய்யப்பட்டுதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வே துறை எஸ்.பியாக செந்தில்குமார், வட சென்னை போக்குவரத்து துணை ஆணையராக ராஜசேகரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், மதுரை மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையராக பழனிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், கமாண்டோ படை எஸ்.பியாக சஷியாமளா தேவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.