சென்னை,

நாடு முழுவதும் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் நீட் நுழைவு தேர்வு எழுதி தேர்வு பெற வேண்டும் என்று கடந்த ஆண்டு முதல் மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது என்று கூறினார். இதன் காரணமாக தமிழக அரசு இதுவரை மாணவர்களை ஏமாற்றி வந்தது தெளிவாகி உள்ளது.

தமிழகத்தில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், மத்திய அரசின் சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்தும் நீட் நுழைவு தேர்வை எதிர்கொள்ள சிரமப்படுகின்றனர். பாடத் திட்டம் மாற்றம் காரணமாக இந்த தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள முடியாத நிலை உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் நீட் தேர்வு நடத்த கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினார். அதையடுத்து, தமிழக அரசும் நீட்  நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்களிக்கும் அவசர சட்டம் இயற்றியது. அந்த  அவசர சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் தனது ஒப்புதலை அளிக்கும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் கூறினார்.

இது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு  வழக்கில், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும்பொருட்டு, சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சரின் மனைவி நளினி சிதம்பரம் ஆஜராகி தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி வாதாடினார். நீட் தேர்வு மூலமே மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உத்தரவு பெற்றார்.

இந்த நேரத்தில் 1155 மதிப்பெண் பெற்றும், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற காரணத்தால், தனது மருத்துவர் கனவு பொய்த்து போனதால் அனிதா என்ற அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்டார். இது தமிழகத்தில் மேலும் மாணவர்களின் போராட்டத்தை தீவிரப்படுத்தியது.

அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு நீட் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு நடைபெற்றது.

அப்போது, தமிழக முதல்வர் உள்பட அமைச்சர்கள், அடுத்த ஆண்டு (2018)  முதல் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்றுவிடுவோம் என்றும், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  கூறி வந்தனர்.

கடந்த ஓராண்டாக இதை சொல்லிச்சொல்லியே  மிழக மாணவர்களை ஏமாற்றி வந்தனர். தற்போது, பொதுத்தேர்வு தேதிகள், மற்றும் நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

மேலும், நீட் தேர்வு தொடர்பான வழக்குகளை விரைவில் முடிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருவதாகவும் பழைய பல்லவியையே மீண்டும்  செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி ஜனாதிபதி , பிரதமரை சந்தித்து முறையிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கோரி வரும் நிலையில், தற்போது அதற்கான முயற்சிகள் ஏதும் எடுக்காமல், நீட் தேர்வு வருவதை தடுக்க முடியாது என்று தமிழக கல்வி அமைச்சர் கூறியிருப்பது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன்,   ‘நீட்’ தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றும்,  இதுதொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அவை முடிவுக்கு வந்த பின்னர் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் உரிய முடிவு எடுப்பார்கள் என்று கூறிய அவர், ,‘ தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு நடைபெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் கூறினார்.

தமிழகத்தில்,  70,412 மாணவ-மாணவிகளுக்கு, 412 மையங்களில் ‘நீட்’ தேர்வு பயிற்சி அளித்து வருவதாகவும் கூறினார்.

தமிழக கல்வி அமைச்சரின் இன்றைய பேச்சில் இருந்து, தமிழக மாணவ மாணவிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தருவோம் என்று கூறி  தமிழக மாணவ மாணவிகளையும், பெற்றோர்களையும்  ஏமாற்றி வந்தது, தற்போது  வெட்டவெளிச்சமாகி உள்ளது.