சென்னை: நாட்டில் மருத்துவத்துறையில் தமிழகம் தான் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனை ஒன்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:  மேலைநாடுகளை விட குறுகிய காலத்தில் கொரோனாவில் இருந்து மக்களை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். மிகச்சிறந்த மனிதவள கட்டமைப்பை ஏற்படுத்தியதால் நாட்டின் மருத்துவ தலைநகரமாக தமிழகம் உள்ளது.
நாட்டிலேயே மருத்துவ துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. 11 மாவட்டங்களில் புதிய கல்லூரிகள் மூலம் கூடுதலாக 1,650 மருத்துவப் பட்டப் படிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவினை மெய்ப்பிக்க  அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5% வழங்க சட்டம்  இயற்றப்பட்டு உள்ளது என்று பேசினார்.