டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவிருந்த தமிழக அரசின் டாஸ்மாக் மேல் முறையீடு வழக்கு பட்டியலிப்பட்ட நிலையில் திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள் அடிப்படையில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. தனி மனித இடைவெளி உள்ளிட்ட  நிபந்தனைகளை  மீறியதால், ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
மேலும் ஊரடங்கு காலத்தில் மதுபானங்களை விற்பனை செய்யவேண்டும் என்று கொள்கை முடிவு எடுத்தால், அதனை ஆன்லைன் மூலம் மேற்கொண்டு, வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யலாம் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை உச்ச நீதிமன்றம் நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. நாளை காலை 11 மணியளவில் காணொலி வாயிலாக இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இந் நிலையில், நாளை விசாரணைக்கு வரவிருந்த தமிழக அரசின் டாஸ்மாக் மேல் முறையீடு வழக்கு பட்டியலில் இருந்து திடீரென நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக,  தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும்போது தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.