சண்டிகார்:

சண்டிகார் மருத்துவ கல்லூரியில் ராமேசுவரத்தை சேர்ந்த தமிழக   மாணவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்தவர் ராமசாமி. கோவில் குருக்கள். இவருடைய மகன் கிருஷ்ணபிரசாத் (வயது 24).

சென்னை அருகே உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்த கிருஷ்ணபிரசாத் பிறகு முதுகலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆறு மாதங்களுக்கு முன்பு சண்டிகாரில் உள்ள மத்திய அரசின் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர். மருத்துவ கல்லூரியில் சேர்ந்து முதலாம் ஆண்டு பொது மருத்துவம் படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை கிருஷ்ணபிரசாத் பெற்றோருக்கு கல்லூரியில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது, கல்லூரி விடுதியில் கிருஷ்ணபிரசாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர் சண்டிகார் விரைந்து சென்றுள்ளனர்.

இதற்கிடைய அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், நீதி விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்று மாணவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணபிரசாத்துடன் பள்ளியில் படித்த ராமேசுவரம் நண்பர்கள் அரவிந்த், வருண்குமார், கவுதம் ஆகியோர், “ பள்ளியில் படிக்கும்போதே மருத்துவப்படிப்புதான் படிப்பேன் என்ற குறிக்கோளுடன் கிருஷ்ணபிரசாத் இருந்தார். அவர் தைரியமானவர். தற்கொலை செய்திருக்க மாட்டார்”  என்று  தெரிவித்தனர்.

மாணவரின் சித்தப்பா குமார், “15 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணபிரசாத் போனில் பேசினார். அப்போது இந்தி மொழி கடினமாக உள்ளது என்று மனக்குழப்பத்துடன் பேசினார். இந்நிலையில் அவர் இறந்து விட்டதாக வந்த செய்தி மிகுந்த வருத்தத்தை  ஏற்படுத்தி உள்ளது” என்றார்.

சமீபகாலமாக வட இந்தியாவுக்கு முதுகலை மருத்துவம் படிக்க செல்லும் தமிழக மாணவர்கள் மர்மமான முறையில் மரணம் அடையும் சம்பவங்கள் தொடர்வது குறிப்பிடத்தக்கது.