800 ஜென்மங்கள் எடுத்தாலும் ஜெயலலிதாவின் திருமுகம் ஒருபோதும் மறக்காது என உருக்கமாக கடிதம் ஒன்றை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5, 2016ம் ஆண்டு காலமானார். ஜெயலலிதாவின் 3ம் நினைவாண்டு இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, தனது சோகத்தை வெளிப்படுத்தும் விதமாக கடிதம் ஒன்றினை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார். அதில்,

”முன்னூறு நாள் சுமந்து பெறாத அன்னையே – உனைப் பிரிந்து
மூன்றாண்டுகள் ஆகி விட்டதா ? – இன்னும்
எண்ணூறு ஜென்மங்கள் எடுத்தாலும்
மறக்காதம்மா உன் திருமுகம்…

உன் மூச்சை கடன்வாங்கி உழைக்கின்றோம் நித்தம் நித்தம்
உன் பேச்சை தினம்கேட்டு தொழுகின்றோம் வங்கம் பக்கம்
தொலைநோக்கு சிந்தனையால் பாதைபோட்டு தந்தாயம்மா
காலை எடுத்து வைக்கின்றோம் நீயே எங்கள் தாயம்மா…

சிங்கம் உலவிய காட்டில் சிறுநரிகளின் உலைச்சத்தம் கேட்குதம்மா
உன் தங்கநிற முகம்காட்டி சிந்தைகுளிர் குரல் கேட்டால் ஓட்டம்
பிடித்துவிடும் ஓநாய் கூட்டம் – ஊட்டம் நிரம்பி நிற்கின்றோம் தாயே
வரமெனவே வந்தருள்வாயே…

நினைவெல்லாம் நீயே தானம்மா, கண்ணீரால் நனைகின்றோம் உன்
துயிலிடத்தை – தமிழக மக்களின் வாழ்வுயர வந்துதித்த தாயே உன்
கனவினை நனவாக்குவதே இவ்வுயிரின் வேலையம்மா
கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளை இல்லாமலாக்குவோம்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானிருந்து ஆட்சி செய்யும் தாரகையே
நீ கட்டி வைத்து கொடிபிடித்து ஆட்சி நடத்திய கோட்டையில்
அதிமுகவின் பட்டொளி எந்நாளும் பறந்திடவே உழைத்திடுவோம் தாயே
இதை இந்நாளில் உறுதியேற்கிறோம் தாயே”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.