சென்னை: தமிழகத்தில் புதிதாகப் பிறந்த குழந்தை இறப்பு விகிதம் 1000க்கு 17 என்பதிலிருந்து 16 என்பதாக குறைந்துள்ளது என்று 2017ம் ஆண்டுக்கான அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 2013ம் ஆண்டு முதலே, குழந்தை இறப்பு விகிதம் சிறிதுசிறிதாக குறைந்து வருகிறது என்று தெரிவிக்கும் தொடர்புடைய வட்டாரங்கள், 2015ம் ஆண்டு 1000க்கு 19 என்றிருந்த இறப்பு விகிதம், 2016ம் ஆண்டில் 17 என்பதாக குறைந்தது.

அடுத்த 2017ம் ஆண்டில் அந்த விகிதம் மேலும் குறைந்து 16 என்பதாக மாறியுள்ளது. அதேசமயம், தேசிய அளவில் புதிதாகப் பிறந்த குழந்தை இறப்பு விகிதம் 1000க்கு 34 என்பதிலிருந்து 33 என்பதாக குறைந்துள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிராமப்புற தமிழ்நாட்டில், புதிதாகப் பிறந்த குழந்தை இறப்பு விகிதம், 2016ம் ஆண்டு இருந்த 20 என்பதிலிருந்து, 2017ம் ஆண்டு 19 என்பதாக குறைந்துள்ளது. ஆனால், தமிழக நகர்ப்புறங்களில் 1000க்கு 14 என்ற விகிதம் அப்படியே நீடிக்கிறது.

மாநிலம் முழுவதும் செயல்படும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கான 73 சிறப்பு கவனிப்பு யூனிட்டுகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதாலேயே இந்த முன்னேற்றம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.