சென்னை:

மைச்சர் ராஜேந்திர பாலாஜி நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்று,  மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதில் முதன்மையானவர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. சமீபத்தில் நாங்குனேரி தொகுதியில் இஸ்லாமியர் குறித்து தவறாக பேசியதாக தகவல் வெளியானது.

இதற்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்,  அதிமுக ஆதரவு கட்சியான மஜக பொதுச் செயலளார் மு.தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நாங்குநேரி இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களிடம், களக்காடு பகுதியில்  கேசவநேரி என்ற ஊரை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் கடை கோரிக்கைக்காக சென்றுள்ளனர்.

அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடம், கட்சி அரசியலை தாண்டி பொதுமக்கள் மனு கொடுப்பதும், கோரிக்கை வைப்பதும் இயல்பானது. ஏனெனில், அனைவரின் வரிப்பணத்திலிருந்து தான் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு சம்பளம் போகிறது. எனவே அவர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்கள்.

இந்நிலையில் ரேஷன் கடை கோரிக்கைக்காக சென்ற, கேசவ நேரி ஐமாத்தினரைப் பார்த்து, “மோடியுடன் நாங்கள் இருப்பதால், நீங்களும், கிறித்தவர்களும் எங்களுக்கு ஓட்டுப் போட மாட்டீர்கள். உங்களுக்கு எதற்கு நாங்க செய்யனும்? என கேட்டிருக்கிறார். அத்தோடு, காஷ்மீர் போல உங்களை ஒதுக்கி வைக்கனும் என்றும் திமிராக பேசியிருக்கிறார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

யாரிடம் பேசுகிறோம்? என்ன பேசுகிறோம்? என்பது கூட தெரியாமல்  அவர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. அவருக்கு நாவடக்கம் தேவை. பொதுவாக கடந்த 3 வருடங்களாக அவர் அளிக்கும் பேட்டிகள் நகைச்சுவை நடிகரை மிஞ்சும் வகையிலேயே இருக்கிறது என பலரும் சொல்வதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

மக்கள் சேவை என்பது வாக்கு அரசியலை கடந்தது. ஒட்டுப்போட்டவர்கள், எதிர்த்து ஒட்டுப்போட்ட வர்கள், மாற்று கருத்துடையவர்கள் என எல்லோருக்கும் சேவை செய்வது தான் நேர்மையான அரசியலாகும். அரசியலில் வாழ்வுரிமை கோட்பாடுகளை புதைத்து விட்டு, எல்லோரும் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று எந்த கட்சியும், எந்த வாக்காளரையும் நிர்பந்திக்க முடியாது.

இதை எல்லோரும் புரிந்துக் கொள்ள வேண்டும். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களின் பேச்சு, அதிமுக வின் கொள்கைக்கும், நெறிமுறைகளுக்கும் எதிரானது என்பதால், அவரை அதிமுக தலைமை கண்டிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். பொறுப்பற்ற முறையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவதை நிறுத்திக் கொள்வது, அவரது அரசியலுக்கு நல்லது என்பதையும் நல்லெண்ணத்தோடு சுட்டிக் காட்டுகிறோம்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.