நெட்டிசன்:

மன்னன் ராஜ ராஜ சோழனுக்கு ஆலோசனைகளை வழங்கி, தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்தவர், பதினெண் சித்தர் பெருமக்களில் ஒருவரான காவிரியாற்றங்கரைக் கருவூறார் ! பதினெண் சித்தர்களின் பாடல்களே நோய் தீர்க்கும் பெருமந்திரம் என்பார்கள்…

அந்தவகையில் காவிரி யாற்றங்கரைக் கருவூறார் அருளிய காயந்திரி (காயத்ரி அல்ல) மந்திரம் உலக மந்திரங்களின் மூலம் என்கிறார்கள்…

தமிழில் ஒலிக்கும் மந்திர (மனத்திறன் – மண் திறன்) வார்த்தைகள் அனைத்தும் பதினெண்சித்தர் பெருமக்களால் (18 சித்தர்கள்) உருவாக்கப் பட்டவையே. இப்படிப்பட்ட மந்திரங்களை ஏற்க மறுத்த சித்தர் பெருமக்களும் பதினெண்மர் வரிசையில் உண்டு…

காயத்ரி மந்திரம்தான், ‘ப்றம்மோபதேசம்’ என்கிறார்கள்… ”மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு, துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு, சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே” – என்று, ’இரண்டாம் திருமுறை’ யில் திருஞானசம்பந்தர், கொஞ்சம் மாற்றிப் பாடுகிறார்…

(( பதினாறு ஆண்டுகளே வாழ்ந்து, 16000 பதிகம் பாடிய ஆற்றலாளர், திருஞானசம்பந்தரின் கதையை (கி.பி. 640 – 656) பிறிதொரு நாளில் பேசலாம்.)) கருவூறார் இயற்றிய காயந்திரி மந்திரம், அதே தொனியோடு அதே ஒலியோடு, அதே உயிர்ப்போடு, இன்னொரு மொழி ஒலி வடிவில் எப்படி மாறி ஒலிக்கிறது என்று பாருங்களேன்…

ஓம் பூர்வ புலன்கள் சுவையாகுக (ஹோம் பூர் ப்வ ஸுவஹ ) தத்துவ வித்துக்கள் அரணாகுக (தத் ஸவிதுர் வரேண்யம்) பாரின்கோ தேவர் வசிக்கும் தீ மகிழட்டும் (பர்ஹோ தேவஸ்ய தீமஹி) தீயே யோகப் பரஞ்சோதி யாகும்!” (தியோ யோந ப்ரச்சோதயாத்) இப்போது தனித்தனியாகக் பார்க்கலாம்…

===== தமிழில் காயந்திரி : =====

ஓம் பூர்வ புலன்கள் சுவையாகுக தத்துவ வித்துக்கள் அரணாகுக பாரின்கோ தேவர் வசிக்கும் தீ மகிழட்டும் தீயே யோகப் பரஞ்சோதி யாகும் !

======= இன்னொரு மொழி காயத்ரி : =======

ஹோம் பூர் ப்வ ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்ஹோ தேவஸ்ய தீமஹி தியோ யோந ப்ரச்சோதயாத்…

(இரண்டையும் தனித்தனியே உச்சரித்துப் பாருங்களேன்) =====

தமிழ் காயந்திரி மந்திரமான, ”ஓம் பூர்வ புலன்கள் சுவையாகுக தத்துவ வித்துக்கள் அரணாகுக பாரின்கோ தேவர் வசிக்கும் தீ மகிழட்டும் தீயே யோகப் பரஞ்சோதி யாகும் !” என்பதின் நேரடிப் பொருளாக இப்படிப் புரிந்து கொள்ளலாம்…

”காயந்திரி மந்தரம் கூறுகிறேன்… பயனாகட்டும், சுவையாகட்டும்! முற்பிறப்பும் மறுபிறப்பும் இப்பிறப்பிலேயே நிறைவாகட்டும்!

ஆவி, ஆன்மா, உயிர், மூன்றும் ஒன்றாகட்டும் அனைத்துக்கும் தாயாக, ஆயாக அப்பனாக, தாத்தானாக இருப்பவர்களே ஏற்றிடுக, ஏற்றிடுக, ஏற்றிடுக, ஏற்றிடுக” …

“ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்” – என்கிற. இன்னோர் மொழி வடிவ காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் :

“யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம்” என்று பொருள் தருகிறார்கள்…

…நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது இதன் சுருக்கம்…

தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அருளியது.

காயந்திரி மந்திரங்களின் தமிழாக்கம்…

“ஓம் பூர்வ புலன்கள் சுவையாகுக!
தத்துவ வித்துக்கள் அரணாகுக!
பாரின்கோ தேவர் வசிக்கும் தீ மகிழட்டும்!
தீயே யோகப் பரஞ்சோதி யாகும்!”

தமிழர்கள் எல்லாரும் அன்றாடம் காயந்திரி மந்தரம் 108 தடவை சொல்லியேயாக வேண்டும். இதுதான் தமிழர்களை மொழிப் பற்றும், இன ஒற்றுமையும், நாட்டுரிமையும், பண்பாட்டுப் பிடிப்பும் உள்ளவர்களாக ஆக்கிடும். தமிழர்க்கு அகவொளியும், முகவொளியும் ஏற்பட்டால்தான் இகவொளி கிடைக்கும். அதன்பிறகே அமுதத் தமிழால் தன்னுரிமை மிகு அருளாட்சி அமைக்க முடியும்.