எழுத்தாளர், இயக்குநர் சந்திரா தங்கராஜ் அவர்களது முகநூல் பதிவு:

மலா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, ஏதோ ஒரு டிவி சேனல் காரர் மைக்கை முன்னே நீட்டி படம் எப்படி இருக்கு? என்றார். நான் ஒற்றை வார்த்தையில் ‘நல்லாருக்கு’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.

அப்படி ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டு வரும் படமா தரமணி?…

இல்லை பல கட்டுரைகளில் பேசவேண்டிய விசயங்கள் படத்தில் இருக்கிறது.

தரமணியின் கதையை படமாக்குவதற்கு முன்பே இயக்குனர் ராம் சொன்னபோது stunning என்று கண்ணீர் ததும்பச் சொன்னேன்.

ஆனால் இன்று படம் பார்த்த பின்பு தன்னிரக்கம், அழுத்தம், ஆண் மைய்ய சமூகத்தால் அழுத்தப்பட்ட வாழ்வு, வலி என்று பல்வேறுவிதமான உணர்வுகள் மனதை சிதறடித்துக்கொண்டிருக்கிறது. எளிமையாக கடந்து போக முடியாத, இக்காலத்திய ஆண் பெண் உறவுச் சிக்கலை நியாயமான மனிதத்தன்மையோடு எங்கேயும் சாய்ந்துவிடாமல் மிகத்தெளிவான திரைக்கதையோடு இயக்குனர் தரமணியை இயக்கி இருக்கிறார்.

ராம் அவர்களின் சிறப்பான இயக்கம் தரமணி என்பதில் சந்தேகம் இல்லை. உண்மையாக படம் பற்றிய நிறைய உளவியல் தாக்கம் இருப்பதால் விரிவாக இப்போது எழுத முடியவில்லை. ஆனால் தரமணி படம் குறித்து நிறைய உரையாடலை நிகழ்த்த வேண்டி இருக்கிறது.

ஆண், பெண் உறவுச் சிக்கலை பேசும் படத்தில் இவ்வளவு அரசியல் கருத்துக்களை எந்த திணிப்பு இல்லாமல் செய்ய முடியுமா? அதுவும் நுண்ணுர்வோடு செம கனெக்டிவிட்டியாக! இயக்குனர் குரலில் ஒலிக்கும் அரசியல் கருத்துகள் அனைத்திற்கும் தியேட்டரில் அவ்வளவு கைதட்டல்கள். brilliant இயக்குனர் ராம்