சென்னை: ஊரடங்கு தளர்வுகள் எதிரொலியாக தமிழகத்தில் வரும் 18ம் தேதி முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கானது வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசானது பல தடைகளையும் விதித்துள்ளது.

இ பாஸ் ரத்து, பேருந்து சேவை என அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. அதே நேரத்தில் மே 7ம் தேதி முதல் 4000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், பார்கள் திறக்கப்படவில்லை.

ஊரடங்கின் போது அரசின் தடை உத்தரவில் பார்கள் தடை நீட்டிப்பு குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை. ஆகையால், தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் மீண்டும் திறக்க வேண்டும் என்று பார் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந் நிலையில், வரும் 18ம் தேதி முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக இடைவெளி, முதல் கட்டமாக குறைவான நபர்களுக்கு மட்டும் அனுமதி, முகக்கவசம் உள்ளிட்டவைகள் கட்டாயமாக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பு வரும் 15ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.