சென்னை:
தமிழகத்தில் இன்று நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியை நிறுத்துவதை விட டாஸ்மாக் கடைகளை மூடலாம்: திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார்.
காவிரி பிரச்சினையில் மத்திய அரசை கண்டித்து, தமிழக அரசியல் கட்சியினர் பல்வேறு வகையான போராட் டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நேரத்தில், தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது என திமுக உள்பட பல அரசியல் கட்சியினர், தமிழ் அமைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக கூட்டணியுடன் இணைந்து காவிரிக்காக போராட்டம் நடத்தி வரும் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,
தமிழகத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியை நிறுத்துவதை விட, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி போராட்டம் நடத்தலாம் என்று கூறினார்.
மேலும், கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து பேசியதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த திருநாவுக்கரசர், காவிரி பிரச்சினை குறித்து, ராகுல்காந்தி, கர்நாடாகவுக்கு ஆதரவாகவோ, தமிழகத்திற்கு எதிராகவோ எதுவும் பேசவில்லை என்று கூறினார்.
மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிக்கவில்லை எனில் சித்தராமையாவிடம் முறையிடுவேன் என்றும் தெரிவித்தார்.