சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. இதற்கான மின்னணு சாதனங்கள் பொருத்துவதற்கான டெண்டரை  ஐசிஐசிஐ வங்கி  கைப்பற்றி உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் டிஜிட்டல் மயமாக்க தமிழக அரசு முன்னரே அறிவித்திருந் தது.  மொத்தமுள்ள  5,330 மதுபானக்  கடைகளிலும் டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கான தொழில்நுட்ப வசதிகள் செய்தல், சரக்கு இருப்பை தெரிந்து கொள்ளும் வகையில் டேட்டாக்களை கணினிமயமாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சென்னை உயர்நீதிமன்றமும் தமிழக டாஸ்மாக் கடைகளில் மின்னணு விற்பனை முறையை கொண்டுவர வேண்டும் என கடந்த மே மாதத்தில் தீர்ப்பு வழங்கிது. இதையடுத்து, டாஸ்மாக் கடைகளில் மின்னணு விற்பனை எந்திரங்களை அமைப்பதற்கு வங்கிகளிடம் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது.

இந்த டெண்டரில் 7 வங்கிகள் கலந்து கொண்ட நிலையில் குறைவான ஒப்பந்த புள்ளிகளை அளித்து மின்னணு விற்பனை இயந்திரங்கள் அமைக்கும் ஒப்பந்தத்தை ஐசிசிஐ வங்கி கைப்பற்றி உள்ளது.

இதன் காரணமாக, விரைவில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், மதுபானம் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதற்கான தொகையை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக செலுத்தலாம். மெலும் யுபிஐ, போன் பே, கூகிள் பே, க்யூஆர் கோட் ஸ்கேன் செய்து பணம் செலுத்துதல் உள்ளிட்ட சகல ஆன்லைன் வழி பரிவர்த்தனை வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்றும்,  இதுதொடர்பாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.