நெட்டிசன்:

சமூக வலைதளப் பதிவு

சசிகலாவுக்கு எதிராக பன்னீர் கொடுத்த அதிரடி ஸ்டேட்மென்டை தொடர்ந்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து பெரும்பாலான அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலா தரப்பினரால் சுற்றுலா செல்லலாம் என்று அழைத்துச்செல்லப்பட்டு அன்பாக மிரட்டப்பட்டு கூவத்தூர் கடற்கரை அருகே உள்ள சொகுசு பங்களாவில் சகல வசதிகளுடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கிருந்து ஒருசிலர் தப்பி வந்துவிட்ட நிலையில் இன்னும் பெரும்பாலான எம்எல்ஏக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் முழிபிதுங்கிபோய் உள்ளனர்.

தனது குடும்பத்தினர் எப்படி இருக்கிறார்களோ என எண்ணி எண்ணி மூச்சு முட்டிப்போய் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அங்கே தங்கியுள்ள அவர்களுக்கு 3 நாட்களாக சசிகலா நேரில் சென்று பாடம் நடத்தினார். எப்படி பேச வேண்டும்.. என்ன செய்ய வேண்டும் என அன்பாக கூறியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கூவத்தூரில் உள்ள எம்எல்ஏக்கள் வீடு திரும்புவார்கள் என, அவர்களின் குடும்பத்தினர் சந்தோசமாக எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், அவர்களோ வெளியே வர முடியாத நிலையில், யாரோ எழுதி கொடுத்ததை மனப்பாடம் செய்துகொண்டு, எப்படி கிளிக்குஞ்சுக்கு பேசக் கற்றுக்கொடுத்துவிட்டு திரும்ப பேச சொல்லுவோமோ அதுபோல நாங்களும் சசிகலாவுக்கும் எடப்பாடிக்கு ஆதரவாக இருப்பதாக சொன்னதையே திக்கித்திக்கி திரும்பப் திரும்ப சொல்லி வருவது, அதை பார்க்கும் லட்சக்கணக்கான மக்களின் மனதில் கேலிக்குறியதாகவே பதியும் அவலம்தான் நடந்து வருகிறது.

இதற்கு சாட்சி….  கூவத்தூரில் சிறைப்பட்டிருக்கும் பெண் கிளிகளின் இன்றைய பேட்டியை சொல்லலாம்.

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் கூண்டுக்கிளிகளாய் இருப்பது அவர்களின் பேச்சின் மூலமே தெரியவருவது… தமிழ்நாட்டின் போதாத காலம்…… காலத்தின் கோலம் ..…