சென்னை:

பெட்ரோல்-டீசல் மீதான அனைத்து வரிகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைநகர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கர்நாடக சட்டமன்ற தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படா மல் இருந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது.

மத்திய அரசின் இந்த எதேச்சதிரகார போக்கிற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில, பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னையில் பெட்ரோல், டீசல் விலைகள் இன்று லிட்டருக்கு முறையே 18 மற்றும் 23 காசுகள் உயர்த்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.77.61 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.79 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் 12-ம் தேதி முடிவடைந்த நிலையில், 14-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. இடைப்பட்ட காலத்தில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்த போதிலும், எரி பொருள் விலைகளை உயர்த்தாத எண்ணெய் நிறுவனங்கள், இப்போது கச்சா எண்ணெய் விலை உயர்வை விட அதிகமாக எரிபொருள் விலைகளை உயர்த்தி வருகிறது.

எரிபொருட்களுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்யும் முறை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து இன்று வரையிலான 10 மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12.15 ரூபாயும், டீசல் விலை ரூ.13.66 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கின்றன.

அதாவது ஒரு மாதத்திற்கு ரூ.1.36 வீதம் எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த 9 மாதங்களில் பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகமாக உயர்த்தப்பட்டிருப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இப்போதைய வரு விகிதங்கள் தொடர்ந்தால் விரைவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.150 என்ற உச்சத்தை எட்டக் கூடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் இந்தியாவின் பொருளாதாரம் நிலை குலைந்துவிடும். அது நல்லதல்ல.

2008-09 ஆம் ஆண்டில் இப்படி ஒரு நிலை ஏற்பட்ட போது, கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் மீதான சுங்கவரி, கலால்வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டன. மாநிலங்கள் வசூலிக்கும் விற்பனை வரியும் பல மாநிலங்களில் குறைக்கப்பட்டது. இப்போதும் அதேபோல எரிபொருட்கள் மீதான அனைத்து வரிகளையும் மத்திய அரசு உடனடியாக ரத்து செய்து பெட்ரோல், டீசல் விலை உயர்விலிருந்து ஏழை – நடுத்தர மக்களை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.