டீ விற்க சென்ற சிறுவன் .. கடைசியில் நேர்ந்த பயங்கரம்..

சென்னை மண்ணடி மூர்தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர்ஹசன். கார் டிரைவர். இவரின் மகன் ரியாஸ் (15). இவர் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்ப படித்துவந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஜாகிர்ஹசனுக்கு வருமானம் இல்லை. அதனால் குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்டார். இந்தச் சூழலில் ரியாஸ், குடும்ப சுமையைச் சுமக்கத் தயாரானார். பள்ளிகள் திறக்கப்படாததால் வீட்டில் இருந்த ரியாஸ், டீ வியாபாரம் செய்து வந்தார். சைக்கிளில் டீ கேனை வைத்துக்கொண்டு கட்டட வேலைகள் நடக்கும் இடங்களுக்குச் சென்று ரியாஸ் டீ விற்று வந்தார். அதில் கிடைத்த வருமானத்தில் குடும்பத் தேவைகளைச் சமாளிக்க ரியாஸ் உதவிவந்தார்.

இந்தநிலையில் மண்ணடி அரண்மனைகாரன் தெருவில் 6 மாடி கட்டடப்பணிகள் நடந்துவருகின்றன. அங்கு சென்ற ரியாஸ், 5-வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு டீ கொடுக்க சென்றார். அப்போது கட்டுமான பொருள்களில் கால் தடுமாறி லிஃப்ட் அமைக்கக் கட்டியிருந்த இடைவெளி வழியாக எதிர்பாராதவிதமாகக்  கீழே விழுந்துவிட்டார்.

உடனே அங்குப் பணி புரிந்த தொழிலாளர்கள் கீழே விழுந்த ரியாஸை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 5-வது மாடியிலிருந்து கீழே விழுந்ததால் ரியாஸின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகளவில் வெளியேறியது. மருத்துவமனையில் ரியாஸை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரித்தனர்.

இதுகுறித்து எஸ்பிளனேடு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து ரியாஸின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத் தகவல் ரியாஸின் குடும்பத்தினருக்குத் தெரிந்ததும் அவர்கள் கதறி அழுதபடி அங்கு வந்தனர். ரியாஸின் குடும்பத்தினர், சின்ன வயதில் குடும்ப கஷ்டத்துக்காக டீ விற்க சென்றவன் இப்படி எங்களை விட்டுவிட்டுப் போய்விட்டானே என்று கதறி அழுதனர். ரியாஸின் குடும்பத்தினருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர்.

கொரோனா ஊரடங்கில் குடும்ப பாரத்தைச் சுமக்கச் சைக்கிளில் டீ விற்ற மாணவன் ரியாஸ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.