சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சென்னை  பல்கலைக் கழகத்தின் மாதிரி தேர்வு நிறுத்தப்பட்டு உள்ளது. இது மாணவர்களிடையே  குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

யுஜிசி அறிவுறுத்தியபடி,  சென்னை பல்கலைக்கழகம் ருகிற 21-ந்தேதி முதல் இறுதி செமஸ்டர் தேர்வு  தொடங்கி நடைபெறும் என்றும், ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்தது. அதன்படி,  90 நிமிடம் நடைபெறும் இந்த தேர்வை ஆன்லைனில் எழுத இருக்கும் மாணவர்கள் அதனை எப்படி எதிர்கொள்வது? என்பது குறித்து அறிந்து கொள்ள மாதிரி தேர்வு நடத்தப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்தது.

அதன்படி, 18, 19ந்தேதிகளில் மாதிரித் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், நேற்று (18ந்தேதி)  பிற்பகல் 2.30 மணி முதல் 4 மணி வரை மாதிரி தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான யுசர் ஐடி-க்களும் கொடுக்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட நேரத்தில், மாணவர்கள் லாகின் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. சுமார் 4 மணி வரை ஆன்லைன் தேர்வு நடைபெறவில்லை. இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

இதற்காக மாணவர்களுக்கு லாக்கின் ஐ.டி. குறித்த அனைத்து தகவல்களும் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாதிரி தேர்வை நடத்த முடியவில்லை என்று சென்னை பல்கலைக்கழகம் தரப்பில்  தெரிவிக்கப்பட்டது.  மீண்டும் எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல் இன்று (19ந்தேதி)  தெரிவிக்கப்பட இருப்பதாகவும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்தது.

மாதிரி தேர்வுக்கே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், இறுதி செமஸ்டர் தேர்வை எழுதும்போது இதேபோன்று பிரச்சனை வந்தால் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படாதா? என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.