இந்திய எல்லை பாதுகாப்பு படையின்  29வது பட்டாலியனை சேர்ந்த டி.பி.யாதவ் வீரர், காஷ்மீர் பகுதியில் பணிபுரிகிறார்.

இவர், பேசிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், “ராணுவ வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுகிறது. ஆகவே நாங்கள் பசியுடன் எல்லையைக் காத்து வருகிறோம். உயரதிகாரிகள் ஊழல் புரிந்து, எங்கள் உணவில் கைவைத்துவிடுகிறார்கள்” என்று பேசியிருந்தார்.

இவர் பணி புரியும் எல்லை பாதுகாப்பு படை. (பி.எஸ். எப்)  உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. ஆகவே உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “அந்த வீரரின் குற்றச்சாட்டு குறத்து உடனிடியாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

பிறகு, “குறிப்பிட்ட அந்த வீரர் ஒழுங்கீனமானவர். குடிகாரர். உயரதிகாரிகளின் கட்டளைக்கு கீழ்ப்படியாதவர்” என்று தகவல்கள் பரவின.

இந்த நிலையில், டி.பி.யாதவ் “என்ற அந்த வீரர்  மீது துறை ரீதியான நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியிருக்கிறது. இன்னொரு புறம், அந்த வீரர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் பரவி வருகிறது.

ஆனால் இந்த இரு தகவல்களையும் உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில், “குறிப்பிட்ட அந்த வீரர் கூறிய புகார்கள் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும். அவரை குடிகாரர், ஒழுங்கீனமானவர் என்று குற்றம்சாட்டி தண்டிக்க நினைக்கக்கூடாது.  உயர் அதிகாரிகளின் ஊழல் குறித்த அந்த வீரர் தெரிவத்துள்ளார். ஏற்கெனவே ராணுவத்தின் உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் இணைந்து ஊழல் புரிந்த வரலாறு இந்தியாவுக்கு உண்டு. ஆகவே அந்தஅப்பாவி ராணுவ வீரரை பழிவாங்கக்கூடாது” என்று சமூகவலைதளங்களில் பலரும் எழுதி வருகிறார்கள்.