டெல்லி: காலதாமதமான ஊதியம், 18 மணி வேலைநேரம் என்று டெல்லி, லக்னோ இடையேயான இயங்கும் தேஜஸ் ரயில் ஊழியர்கள் சக்கையாக பிழியப்படுகிறார்கள் என்று புகார்கள் எழுந்துள்ளன.

சொகுசு வசதிகள், அதிவேகம், நவீன வசதிகள் என இந்தியாவின் முதல் தனியார் ரயிலாக தேஜஸ் ரயில் சேவை கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதைக்கு பெரும் வரவேற்பு இருந்ததாக ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டு இருந்தது.

ஆனால், அதே ரயிலில் பயணிக்கும் ஊழியர்களால் சுக்கு,நூறாக அந்த பிம்பம்  உடைக்கப்பட்டிருக்கிறது. தனியார், பொது கூட்டளிப்பு என்ற அடிப்படையில்  இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. சமையல், உணவு தயாரிப்பு, சுகாதாரம் ஆகியவை ஐஆர்சிடிசி மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய இந்த ரயிலில் பயணிகளுக்கான வசதிகள் பற்றி பேசும் முன்பாக, ஊழியர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது குறித்து அந்த ரயிலின் ஊழியர்கள் கூறி இருப்பதாவது: உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்  போதும் பணியாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறோம்.

மீறினால் பணிநீக்கம் செய்யப்படுகிறோம். இதுவரை கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர். எந்த வித முன்னறிவிப்பும் கொடுக்கப்படுவது இல்லை.

மேலும், பயணிகளுக்கு வழங்கப்படும் தண்ணீர், உணவு ஆகியவை டெல்லியை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் மூலம் வழங்கப்படுகிறது. ஆனால், அவை  சுகாதாரமாக இல்லை.

ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே அந்த நிறுவனத்தில் சேர முடியும் என்ற ஒரு குற்றச்சாட்டு ஏற்கனவே வளைய வந்துள்ளது. பெண் ஊழியர்கள் பலர், பயணிகளால் கடும் இன்னல்களுக்கும், தொந்தரவுகளுக்கும் ஆளாகி இருக்கின்றனர்.

இதுதொடர்பாக தேஜஸ் ரயிலின் மேலாளர் அவந்திகா சிங் கூறி இருப்பதாவது: என்னுடன் பணியாற்றிய ஊழியர்களில் இதுவரை 12 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தீபாவளிப் பண்டிகைக்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி காலத்தில் தான் பணியாற்றுகிறோம் என்று நிறுவனத்தால் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதனால் 1 மாதம் நோட்டீஸ் கொடுக்கவேண்டும். ஆனால் அந்த விதிகள் மீறப்படுகின்றன என்றார்.

அண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்ட பிராச்சி படேல் கூறுகையில், கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும் என்று நான் சேரும் போது கூறவில்லை. காலை 5 மணிக்கு தொடங்குகிறது என்றால் இரவு 10 மணி வரை பணியாற்ற் சொல்கின்றனர்.

வேலைப்பளு தாங்காமல் பணியின் போதே நான் மயக்கமாகி விட்டேன். கான்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். நினைவு வந்தவுடன், உடனடியாக என்னை பணியில் சேருமாறு அழைத்தனர். இது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

யாராவது இதை பற்றி கேள்வி எழுப்பினால், அவர்களை கட்டாயமாக அமைதிப்படுத்தி, பின்னர் மிரட்டுகின்றனர். மேக்கப் சரியாக இல்லை என்று அபராதமும் சில ஊழியர்கள் செலுத்தி உள்ளனர் என்றார்.

ஆனால் ஊழியர்களின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் அந்த நிறுவனம் முற்றிலும் மறுத்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் மனித வளத்துறை மேலாளர் பிரதாப் சிங் கூறியிருப்பதாவது:

யாரையும் பணிநீக்கம் செய்யவில்லை. ஊழியர்கள் துன்புறுத்தப் படுகிறார்கள் என்ற தகவல் எங்களுக்கு வரவில்லை. இதுகுறித்து ஏதேனும் புகார்கள் வந்தால் முறைப்படி விசாரிப்போம் என்றார்.

ஐஆர்சிடிசி பொது மேலாளர் அஸ்வினி ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், பணியில் இருந்து ஊழியர்கள் ஏன் நீக்கப்பட்டார்கள் என்பது பற்றி எதுவும் தெரியாது. ஊழியர்கள் பணிநீக்கம், அவர்கள் மீதான நடவடிக்கைக்கு எங்களுக்கு தொடர்பில்லை.

எனக்கு தெரிந்த வரை, தீபாவளி பண்டிகைக்கு பிறகு ரயிலின் சில பெட்டிகள் அகற்றப்பட்டன. அதில் இருந்த பணியாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.