ஐதராபாத்: நாட்டையே உலுக்கிய தெலுங்கானா ஆணவ படுகொலை சம்பவத்தில் கூலிப்படையை அனுப்பிய அம்ருதாவின் தந்தை திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

தெலுங்கானாவைச் சேர்ந்த தலித் இளைஞர் பிரணய் குமார். பிரபல தொழில் அதிபரின் மகள் அம்ருதாவை காதலித்துள்ளார். சாதியை காரணம் காட்டி அந்த காதலை அம்ருதா தந்தை ஏற்கவில்லை.

இதையடுத்து பிரணய் குமாரும் அம்ருதாவும் 2018ம் ஆண்டு வீட்டை எதிர்த்து  திருமணம் செய்துக்கொண்டனர். பின்னர், அம்ருதா கர்ப்பமானதையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக பிரணவ் அழைத்துச் சென்றார்.

மகளின் திருமணத்தை ஏற்க முடியாத அம்ருதாவின் தந்தை, கூலிப்படையை அனுப்பி பிரணய் குமாரை கொலை செய்தார். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கூலிப்படையினர், அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பிரணவ் குமார் கொலை செய்யப்பட்டு 4 மாதங்கள் கழித்து அம்ருதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த அம்ருதாவின் தந்தை ஐதராபாத்தில் தமது பண்ணை வீட்டில் தங்கியுள்ளார். அங்கு தனியாக இருந்த மாருதி ராவ் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் போலீசாருக்கு தகவல் தந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.