ஐதராபாத்:

மின்னணு வாகன தயாரிப்பாளர்கள் மற்றும் அந்த திட்டத்தை ஆதரிக்கும் கொள்கையை வெளியிட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து அம்மாநில தகவல் தொழில்நுடப் மற்றும் தொழிற்சாலை துறை முதன்மை செயலாளர் ஜெயேஷ் ரஞ்சன் கூறுகையில், ‘‘ மின்னணு வாகன கொள்கை தயாராக உள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து மற்றம் நகராட்சி நிர்வாக துறை ஆகிய இரு அரசு முகமைகளிடம் இருந்து கருத்துரு பெறுவதற்காக காத்திருக்கிறோம். அந்த துறையினர் எங்களது திட்ட அறிக்கையை ஆய்வு செய்து வருகின்றனர்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘இந்த திட்டத்தில் போக்குவரத்து மற்றும் நகராட்சி நிர்வாகமும் ஒரு அங்கமாக இணைக்கப்படும். இது தொடர்பாக அவர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் இறுதிக்குள் இதற்கான அறிமுக விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொள்கையில் தயாரிப்பாளர்கள், பயன்பாட்டாளர்கள் மற்றும் உப நுட்பவியலாளர்கள் ஆகியோர் முக்கிய காரணிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.

மின்னணு வாகன தயாரிப்பாளர்கள், உப நுட்பவியலாளர்களுக்கு சாதகமான அறிவுப்புகளை தெலங்கானா அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும், ஐதராபாத் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் ஓலா, உபேர் போன்ற கால் டாக்சி நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இறுதி தொலைவில் உள்ள பயணிகளுடன் தொடர்பு ஏற்படுத்தும் வகையில் இந்த ஆலோசனை நடந்து வருகிறது என்று ரஞ்சன் தெரிவித்துள்ளார். இறுதி தொலைவு இணைப்பு திட்டத்தில் மின்னணு வாகனங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.