ஐதராபாத்:

கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் இனி அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கப்படும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த அர்ச்சகர்களுடனான சந்திப்பின் போது நடந்த பேச்சுவார்த்தையில் இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். இந்த சம்பவள் வரும் நவம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

‘‘அர்ச்சகர்களில் இல்லற வாழக்கைக்கு பெண் தர மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த குறையை போக்க இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவில் தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்ள தார்மீக பரிஷத் என்ற அமைப்பு உருவாக்கப்படும்’’ என்றும் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘சுதந்திரத்திற்கு பின் ஆந்திராவுடன் இணைந்திருந்த தெலங்கானா கோவில்கள் மேம்பாடு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன. யாதாத்ரி, வேமுலவாடா, பத்ரதிரி உள்ளிட்ட அனைத்து கோவில்களும் திட்டமிட்டு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

‘‘தூப் தீப்’’ என்ற நெய்வேதிய திட்டம் ஆயிரத்து 805 கோவில்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இது 3 ஆயிரம் கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும். கோவில்களுக்கு மாதந்தோறும் அளிக்கப்படும் உதவித் தொகை 2 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது’’ என்றார்.

‘‘கோவில்களின் நிலங்கள் தவறான நபர்களின் கைகளில் சிக்கியுள்ளது. கோவில்களுக்கு சொந்தமான 83 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவற்றை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

கோவில் நிர்வாகம் மற்றும் தெய்வீக பணிகளில் அர்ச்சகர்கள் தங்களது கவனத்தை செலுத்த வேண்டும். பிராமனர்கள் நலன் காக்கும் வகையில் ரூ. 100 கோடியில் பிராமனர் நல பரிஷத் அமைக்கப்படும்’’ என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.