தெலுங்கானா:
தெலுங்கானாவில் இந்த கல்வியாண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்படாது.
தெலுங்கானாவில் 2020- 21ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்களுக்கான பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று தெலுங்கானா கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
மேலும் தெலங்கானாவில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள் என்றும், இது தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் எனவும் தெலுங்கானா கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தெலுங்கானாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தாக்கக்கூடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புக்கான பள்ளிகளும், மாநிலத்திலுள்ள ஜூனியர் மற்றும் பட்டப்படிப்பு கல்லூரிகளும் பொங்கலுக்கு பிறகு திறக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக தெலுங்கானா அரசு டிசம்பர் முதல் வாரத்திலிருந்து 120 நாட்கள் பள்ளிகளில் வகுப்புகளை நடத்தலாம் என்று முடிவெடுத்திருந்தது, ஆனால் அரசு இதை நடைமுறைப்படுத்தவில்லை, இதையடுத்து ஜனவரி முதல் வாரத்திலிருந்தோ அல்லது பொங்கலுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஒன்பதாம் வகுப்பிலிருந்து, அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பான தெலுங்கானா கல்வித்துறையின் திட்டம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.