சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளால் மொத்தம் 1500 தொலைத்தொடர்பு கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், அம்மாநிலத்தின் சில பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வேளாண் சட்டங்களால், இந்தியாவின் பெரும் முதலாளிகளான முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானி ஆகியோர்தான் பலனடைகிறார்கள் என்று விவசாயிகள் எண்ணுவதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ கோபுரங்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் ஜியோவுக்கு 9000 கோபுரங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஜலந்தரில், ஜியோ ஃபைபர் கேபிள்கள் எரிக்கப்பட்டன.

பல இடங்களில், மின்சார இணைப்பைத் துண்டிப்பதன் மூலமாக தொலைத்தொடர்பு கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு இடத்தில், ஜியோ கோபுரப் பகுதியிலிருந்த ஜெனரேட்டர் எடுக்கப்பட்டு, அருகிலுள்ள குருத்வாராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஜியோ ஊழியர்கள் மிரட்டப்பட்டு விரட்டப்படும் காட்சிகளும் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.