‘’தலைவி’’ படப்பிடிப்புக்கு ஐதராபாத் வந்துள்ள கங்கனாவுக்கு தெலுங்கானா போலீசும் பாதுகாப்பு..

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, ’’தலைவி’’ என்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்படுகிறது.

ஜெயலலிதா வேடத்தில் ’’சர்ச்சை நடிகை’’. கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைவி படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடக்கவிருக்கிறது.

இதில் கலந்து கொள்வதற்காக கங்கனா ஐதராபாத் வந்துள்ளார்.

மும்பை நகரைப் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டுப் பேசி, சிவசேனா கட்சியின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளதால், கங்கனாவின் வருகையும் அவர் தங்கியுள்ள இடமும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அவருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் தங்கி இருக்கும் 10 நாட்களும் அவருக்குக் கூடுதலாகத் தெலுங்கானா போலீசாரும் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

‘’இன்று எனக்கு விஷேசமான நாள். ஏன்? 7 மாதங்களுக்குப் பிறகு ஷுட்டிங்கில் கலந்து கொள்கிறேன். தென் இந்தியாவில் நடைபெறும் ‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பு தான் அது’’ என கங்கனா, தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

– பா.பாரதி.