டில்லி:

ஜார்கண்ட், பீகார் மாநிலங்களில் அதிகப்படியான வெப்ப நிலை பதிவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நேற்று நாடு முழுவதுமே வெப்பத்தில் தாக்கம் பரவலாக அதிகமாக இருந்தது. அடுத்து வரும் வாரங்களில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கப்பட் டுள்ளது.

மகாராஷ்டிரா நந்துர்பார் பகுதியில் 43 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. இதனால் நகர் முழுவதும் வெப்பத்தின் தாக்கத்தில் சிக்கி தவித்தது. நாட்டிலேயே அதிக வெப்பமயமான நகரமாக இது இருந்தது. இதை தொடர்ந்து போபால் நகரத்தில் 40 டிகிரி வெயில் கொளுத்தியது.

ஜார்கண்ட், பீகாரின் பல பகுதிகளில் வழக்கத்தை விட 5.1 டிகிரி வெயில் கூடுதலாக இருந்தது. உ.பி., நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம், திரிபுரா மற்றும் உத்தரகாண்ட், மேற்குவங்கம், ஒடிசா, கிழக்கு மத்திய பிரதேசத்தில் சில பகுதிகள் வழக்கத்தை விட 3.1 டிகிரி வெயில் அதிகமாக இருந்தது.

பஞ்சாப், மேற்கு மத்திய பிரதேசம், சவுராஷ்டிரா, கட்ச், கிழக்கு ராஜஸ்தான், விதர்பால மராத்வாடா, ராயலசீமா ஆகிய இடங்களிலும், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, சண்டிகர், டில்லி ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் வழக்கத்தை விட வெப்பம் கூடுதலாக பதிவாகியிருந்தது.

மத்திய மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா உள்பகுதி, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் சற்று வேகம் குறைந்து இருந்தது.