டெல்லி:

“பயங்கரவாதி பிரக்யா, பயங்கரவாதி கோட்சேவை ‘தேசபக்தர்’ என கூறிய நாள் பாராளுமன்றத்தின் துக்க நாள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டு உள்ளார்.

சிறப்புப் பாதுகாப்புக் குழு சட்டத்திருத்த மசோதா குறித்து நடைபெற்ற விவாதத்தின்போது, திமுக உறுப்பின் ராஜாவின் பேச்சின்போது குறுக்கிட்டு பேசிய பாஜக சர்ச்சை எம்.பி. பிரக்யா தாக்கூர், காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை தேச பக்தர் என்று கூறினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாராளுமன்றம் நேற்று முதல் அமளிதுமளி பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிரக்யா தாக்கூரின் பேச்சு குறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, “பயங்கரவாதி பிரக்யா தாகூர், பயங்கரவாதி கோட்சேவை ‘தேசபக்தர்’ என்று பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். இந்த நாள் பாராளுமன்றத்தின் துக்க நாள்! என்று கூறியுள்ளார்.

இன்று செய்தியளார்களிடம் பேசிய ராகுல்காந்தி,  “பாஜக பாராளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் மக்களவையில் நாதுராம் கோட்சேவை ‘தேசபக்த்’ என்று குறிப்பிட்டுள்ளார்,  அவர்  ஆர்.எஸ்.எஸ் & பாஜகவின் இதயம் போன்றவர். அதை மறைக்க முடியாது.

 இந்த விவகாரத்தில்,  நான் என்ன சொல்ல முடியும்? அந்தப் பெண்ணுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி எனது நேரத்தை வீணாக்கத் தேவையில்லை” என்றும் கூறி உள்ளார்.