சென்னை:

சுமார் 8 ஆண்டுகள் அவகாசம் கொடுத்தும், ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வை எழுதாத ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கக்கூடாது என்றும், அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும்  சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த நிலையில், பணிநீக்கம் செய்யும் உத்தரவை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கை கோடை விடுமுறைக்கு பிறகு விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் தகுதியின்றி ஆசிரியர் நியமனம் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, ஆசிரியர்கள் நியமனம் டெட் தேர்வு மூலமே நிரப்பப்பட வேண்டும் என்று மத்தியஅரசு கடந்த 2012ம் ஆண்டு உத்தரவிட்டு உள்ளது. இதை உச்சநீதி மன்றமும் உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்திலும், இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி,   2012ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தேர்வை, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், சிறுபான்மை பள்ளிகளில்  பணியாற்றி வரும் ஆசிரியர்களும் தகுதி தேர்வு எழுதி  தேர்வாக வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதை ஏராளமான ஆசிரியர்கள் எழுதி தேர்ச்சி பெற்றுவிட்ட நிலையில், சுமார் 1500 ஆசிரியர்கள் தேர்வுகள் எழுதியும் தேர்ச்சி பெற முடியாமல் தத்தளித்து வருகின்றனர். சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேல் கால அவகாசம் வழங்கியும், அவர்கள் தேர்ச்சி பெறாத  நிலையில், தகுதியற்ற அந்த 1500 ஆசிரியர்களுக்கும் சம்பளத்தை நிறுத்த நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து,  ராஜ்குமார் உள்பட  100 ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்., அவர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவில், தமிழகத்தில்,  தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தி ஒன்பது ஆண்டுகளில் ஆண்டுக்கு இரண்டு முறை என 18 தேர்வுகள் நடத்தப்பட்டிருக்கவேண்டும். ஆனால் தமிழகத்தில் 3முறைதான் நடத்தப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளனர்.

மேலும்,  தேசிய தகுதித் தேர்வை அடிப்படையாகக் கொண்டு தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், தமிழக ஆசிரியர்கள், தேசிய தகுதி தேர்வை எழுத முடியாது எனவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போதுகூட தேர்வு அறிவிப்புதான் வெளியாகி உள்ளதே தவிர எப்போது தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதிப்பதாகக் கூறி, விசாரணையை கோடை விடுமுறைக்குப் பிறகு தள்ளிவைத்தது.