பழனி,

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி கோவிலில் இன்று முதல் பிப்.2ந்தேதி வரை தங்கத்தேரோட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக பழனி  கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்றோ,  பவுர்ணமி தினத்தன்றோ தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்த வருடம் ஜனவரி மாதம் 31ம் தேதி (நாளை மறுநாள்)   தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

அதே நேரத்தில் வடலூர் ராமலிங்க அடிகளார் ஞான சபையின் ஜோதி தரிசனமும் அன்று நடைபெறும்.

இந்நிலையில், தைப்பூசத்தையொட்டி  முருகனின் அறுபடை வீடுகளுக்கும் பக்தர்களின்  கூட்டம் அலை மோதும். பல வகையான காவடிகள் எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை  செலுத்தி வருகிறார்கள்.

இதன் காரணமாக பழனியில் இன்று முதல் பிப்ரவரி 2ந்தேதி வரை 5 நாட்கள் தங்கத்தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.