சென்னை

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் ஆனந்தன் என்னும் இளைஞர் எரித்துக் கொல்லப்பட்டதற்கு தமிழிசை இரங்கல் செய்தி அளித்துள்ளார்.

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் ஆனந்தன் என்னும் இளைஞர் விடுதலைச் சிறுத்தைக் கட்சியை சேர்ந்த சிலரால் எரித்துக் கொல்லப்பட்டார்.  அதற்கு பா ஜ க மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் செய்தி அனுப்பி உள்ளார்.

அவர், “கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வருவாய் வட்டம் சார்ந்த சாத்த வட்டம் கிராமத்தில் வசிக்கும் ஹரிகிருஷ்ணன் மகன் ஆனந்தன் என்ற இளைஞர், அதே பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த திரு.செல்லப்பன் என்பவரின் தூண்டுதலின் பேரில் உயிரோடு கொளுத்தப்பட்டு இறந்துள்ளார் என்பதைக் கேள்வியுற்று மன வேதனை அடைந்துள்ளேன்.  அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.  அவரை இறந்து வாழும் குடும்பத்துக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்த இளைஞரின் மரணத்துக்கு காரணமே ஆற்று மணல் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்னையே முதன்மை காரணமாகும்.  உயிர் நீத்த இளைஞர் நியாயமாக இந்த தவறை தட்டி கேட்டதின் விளைவாக அவரை உயிருடன் எரித்துள்ளனர் என்பதை மக்களின் வாய் வழியாக நான் அறிய வருகிறேன்.  மேலும் அந்த இளைஞர் இறக்கும் தருவாயில் கொடுத்த வாக்கு மூலம் சிலரால் திரிக்கப்பட்டுள்ளது என்பதை அப்பகுதி மக்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

எனவே, உடனே மணல் குவாரிகளை மூடி சீல் வைக்க வேண்டும்.  இந்த மணல் திருட்டிற்கு உடந்தையாக செயல்பட்ட எஸ். பி,  சி.ஐ.டி தலைமை காவலர் திரு. சிவகுமார் மீது துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இறக்கும் தறுவாயில் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் கொலையாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.  கொலையான இளைஞர் ஆனந்தன் குடும்பத்துக்கு அரசு நிதி வழங்கப்பட வேண்டும்.  கருணை அடிப்படையில் வாழ்வாதாரமின்றி நிர்கதியாக நிற்கும் அக்குடும்பத்திற்கு அரசு வேலை ஒன்றை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”  என தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.