சென்னை:

கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் தன்னலம் பாராது பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா இந்தியாவிலும் பீதி கிளப்பி வருகிறது. இங்கு 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 10 உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  மருத்துவ மற்றும் தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள்  தன்னலம் பாராது 24 மணிநேரமும் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக டிடிவி தினகரன் டிவிட் பதிவிட்டு உள்ளார். அதில்,  கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தன்னலம் பாராது பணிபுரிந்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் சேவை மகத்தானது. மிகுந்த நன்றிக்குரியது. அவர்களைப்   பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

ஆனால், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டிருக்கிற கவச உடைகள் உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டிய தரத்தில் இல்லை என்று வெளியாகும் தகவல்கள் கவலை அளிக்கின்றன.

அரசு இதனை உடனடியாக கவனத்தில் கொண்டு சரியான கவச உடைகளை வழங்குவதுடன் தேவையான மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் தயார் நிலையில் வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.