“தரமணி” திரைப்படம் ரசிகர்களை அடுத்த கட்டத்துக்கு இழுக்கும் என்று இயக்குநர் தங்கர்பச்சான் பாராட்டியிருக்கிறார்.

இப்படம் குறித்த அவரது முகநூல் பதிவு: “தரமணி திரைப்படம் வெறும் தீவிர சினிமாவாக மட்டும் உருவாக்க முயன்றிருந்தால் இதை எழுத வேண்டியத் தேவை இருந்திருக்காது.

வணிகத்திரைப்படப்போட்டிக்குள் தரமணி போன்ற படைப்புகளை திறனாய்வு செய்பவர்கள் வெறும் அப்படிப்பட்ட கண்ணோட்டத்தில் மட்டும் இத்திரைப்படம் குறித்து விவாதித்தால் அதில் அவர்களுடைய அறியாமை மட்டுமே வெளிப்படும். இயக்குநர் ராம் என்னிடத்தில் பணி புரிந்தவர் என்பதற்காக இக்கருத்தை உரைக்கவில்லை.

நூறு ஆண்டுகளுக்கு மேலாக பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி செயல்பட மறுக்கும் தமிழ் சினிமாவை ஒரு கண்டிப்பான ஆசிரியர் போல பிரம்பு கொண்டு மிரட்டி நவீன திரைப்பட மொழியில், அல்லாடும் சம கால சிக்கலை மக்கள் முன் போட்டு தோலுரிக்கிறார்.

1950 – 60 ஆம் ஆண்டு இறுதி வாக்கில் மரபு மீறிய திரைப்படங்கள் பிரான்ஸ் நாட்டில் உருவான போது அதன் முன்னோடியாக இருந்தவரும் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநருமான “ப்ரான்ஸ்வோ த்ரூஃபோ என்பவர். அக்கால கட்டத்திற்குப்பின் வெறும் கதை சொல்லிக்கொண்டு வந்த திரைப்படக்கலை மரபுகளை உடைத்துக் கொண்டு புனிதங்களை எல்லாம் தலை கீழாக புரட்டிப் போட்டது.

அப்படிப்பட்ட வேலையைத் தான் ராம் இப்போது செய்திருக்கிறார். உலகம் முழுவதும் திரைப்படக் கலை அறிமுகம் ஆன போது தான் நமக்கும் அறிமுகமானது. ஆனால் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது ஐம்பது ஆண்டுகள் இரசனையில் பின் தங்கிக் கிடக்கிறோம்.

இதைச் சொன்னால் நம்மால் உண்மையைத் தாங்கிக்கொள்ள முடியாது தான். அதற்கு காரணம் மற்ற நாட்டு மக்கள் கலைக்குப் பின்னால் ஓடுகிறார்கள். நாம் நடிகர்கள் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதே புரிதல் அரசியலிலும் வெளிப்படுவதால் தான் நம்மால் நம்மை யார் ஆள வேண்டும் என்பதைக்கூடத் தேர்வு செய்ய முடியவில்லை.

அழுக்கான அருவருப்பானவற்றையெல்லாம் வாழ்வில் கடந்து போகும் நாம் திரைப்படத்தில் மட்டும் தூய்மையைத்தேடி அலைகிறோம். திரையரங்கில் மக்கள் இத்திரைப்படத்தை கவனித்த விதம் தான் என்னை இதை எழுத வைத்தது. தரமணி தமிழ்திரைப்பட எல்லைக்கோட்டுக்கு வெளியில் நின்று மக்களை திரைக்கலையின் அடுத்தக்கட்டத்துக்கு இழுத்துச் சென்றிருக்கிறது.

மக்கள் மனதில் கேள்வியையும், கலக்கத்தையும் விதைத்திருக்கும் இயக்குநர் ராம் மற்றும் இப்படைப்பின் கலைஞர்களை பாராட்டி மகிழ்கிறேன்.

– *தங்கர் பச்சான்”