சென்னை:

டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றுள்ள அதிர்ச்சி அளிப்பதாகவும், டிஎன்பிஎஸ் தேர்வுகள்மீது மக்களிடையே  நம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டியது அரசின்  அவசர, அவசியம்  என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்த நிலையில்,  டிஎன்பிஎஸ்சி ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தியது.

அதில், 99 தேர்வர்கள், இடைத் தரகர்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களைத் தேர்வு செய்ததாகவும் தேர்வுக்காக மேற்படி தேர்வர்கள் இடைத் தரகர்களிடமிருந்து பெற்ற விடைகளைக் குறித்தவுடன் சில மணிநேரங்களில் மறையக் கூடிய சிறப்பு மையினாலான பேனாவினால் விடைகளைக் குறித்துவிட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 99 பேர் வாழ்நாள் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி காவல்துறை விசாரணையும் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த வேண்டியது டிஎன்பிஎஸ்சின் கடமை என்று பாமக தலைவர் ராமதாஸ் அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  “டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. போட்டித் தேர்வுகள் நியாயமான முறையில் நடைபெறும் என்ற நம்பிக்கையில் தேர்வு எழுதிய மாணவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமை யான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகள் மீது நம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டியதுதான் அவசர, அவசியம் ஆகும். அதுகுறித்துப் பரிந்துரைக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரை அடிப்படையில் முறைகேடுகள் இல்லாத, நியாயமான தேர்வுகள் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.