ஐதராபாத்,
ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் உலக தொழில் முனைவோர் மாநாடு இந்த மாதம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஐதராபாத் பகுதியில் பிச்சைக்காரர்கள் பிச்சையெடுக்க ஆந்திர மாநில அரசு தடை விதித்துள்ளது.
ஐதராபாத்தில் உலக தொழில் முனைவோர் மாநாடு வரும் 28ந்தேதி முதல் 30ந்தேதி வரை நடை பெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் இருந்து தொழிலதிபர்கள் ஐதராபாத் வருகை தர உள்ளார்கள்.
பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் இந்த மாநாட்டில, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா டிரம்ப்பும் கலந்துகொள்ள இருக்கிறார். இவான்கா டிரம்ப் அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக, ஐதராபாத்தில் பிச்சைக்காரர் களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பிச்சைக்காரர்களை பிடித்து அவர்கள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு, மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இது ஆந்திராவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஆந்திர மாநில காவல்துறை, காவல்துறை யினரின் இந்த தடை நடவடிக்கைக்கும், உலக தொழில்முனைவோர் மாநாட்டிற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி உள்ளனர்.
ஏற்கனவே, கடந்த 2010ம் ஆண்டு டில்லியில் காமன்வெல்த் போட்டி நடந்தபோதும் டில்லியில் பிச்சைக்காரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.