சென்னை:

சாத்தான்குளம் தந்தை மகன் கொலைக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரம், முன்னாள் மத்திய அமைச்சருமான  ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச்  சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். இந்த   விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு நீதி வேண்டும் அரசியல் கட்சியினர்,சினிமா பிரபலங்கள்,விளையாட்டு பிரபலங்கள் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.உயிரிழந்த தந்தை-மகனுக்கு மக்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் தங்களின்  கண்டனத்தை தெரிவித்தனர். உலக அளவில் டிரென்டிங்காகி வருகிறது.

இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

இந்த  நிலையில் சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டு உள்ளார்.

அதில்,  தூத்துக்குடியில் காவல் துறையினர் கைது செய்து காவலில் இருக்கும்போது மரணம் அடைந்த இரண்டு வர்த்தகர்களுக்கு (தந்தை, மகன்) நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்பொழுது பிறந்திருக்கிறது.

1996 ஆம் ஆண்டில் டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதி மன்றம் வகுத்த விதிகளை மத்திய, மாநில் காவல் துறைகள் பின்பற்றுவதில்லை என்பதே உண்மை.

சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை உகந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து. இருந்தாலும் சிபிஐ விசாரணையை வரவேற்கிறேன்.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.