தூத்துக்குடி:
எனது கருத்து சுதந்திரத்தில் தலையிட பா.ஜனதாவுக்கு உரிமை கிடையாது என்று தமிழிசைக்கு, திமுக வேட்பாளர் கனிமொழி காட்டமாக பதில் கூறி உள்ளார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் தமிழிசையும் களத்தில் உள்ளனர்.
இங்கு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய கனிமொழி, தூத்துக்குடி சோபியா குறித்து பேசியிருந்தார். நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்றால் கனிமொழி பேச முடியுமா? என்று பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய கனிமொழி, இங்கே மேடையில் இருக்கும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து தலைவர்களும், தி.மு.க. என்ற மாபெரும் இயக்கமும் என்னுடன் உள்ளது. ஆகையால் என்னுடைய கருத்து சுதந்திரத்தை பற்றி நான் பேசவில்லை. மாணவி சோபியாவின் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டதே? அதைப்பற்றி கேட்கிறேன். கனிமொழி பேசுவதற்கு உரிமை நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இது பெரியார், அண்ணா பெற்றுத் தந்து இருக்கக்கூடிய உரிமை. இதில் கை வைக்கக்கூடிய அதிகாரம் பா.ஜனதாவுக்கு கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.