நெட்டிசன்:

பாக்யராஜன் சேதுராமலிங்கம் (Packiarajan Sethuramalingam ) அவர்களது முகநூல் பதிவு:

2001 ஆண்டுத் தெஹல்கா டாட் காம் இணையதளம் “Operation West End” என்ற பெயரில் ஒரு வீடியோவை வெளியிட்டது. பாதுகாப்பு அமைச்சகத்தில் எவ்வளவு ஊழல் மலிந்திருக்கிறது என்பது எடுத்துக்காட்டும் விதமாக வெளிக்கொணரபட்ட அந்த வீடியோவில் இராணுவத்திற்குத் தங்கள் பொருட்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகத்திடம் பரிந்துரைக்குமாறு, ஆயுத வியாபாரிகள் போலச் சித்தரித்த சில நிருபர்களிடம் இருந்து அப்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக இருந்த பங்காரு லஷ்மண் பணம் வாங்குவது பதிவாகியிருந்தது.

புதுவருட பரிசு என்ற பெயரில் 150000 ரூபாயை போலி ஆயுத வியாபாரிகளிடம் வாங்கிக்கொண்ட பங்காரு லஷ்மண் அன்றைய பிரதமர் வாஜ்பாயின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ராவை சென்று பார்க்க சொன்னார். மொத்தம் 100 மணி நேர பதிவுகள் கொண்ட அந்த வீடியோவில் அத்துறையைச் சார்ந்த பலர் பணம் வாங்கியது வெளியுலகத்திற்குத் தெரியவந்து இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் மானம் கப்பலேறியது.

கட்சி நிதி தருகிறார்கள் என நினைத்துத்தான் இவர்களிடம் இருந்து பணம் வாங்கினேன் எனப் பங்காரு லக்ஷ்மண் அச்சமயம் சொல்லியிருந்தார். இந்த லஞ்ச ஊழல் விவகாரம் இந்தியாவில் பெரிய அரசியல் சூறாவளியை உருவாக்கியிருந்தது. அவ்வழக்கு 11 வருடங்கள் நடந்தது. இறுதியாக 2012 ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி சி பி ஐ நீதிமன்றம் 4 வருட கடுங்காவல் தண்டனை வழங்கியது. இப்படிப் பங்காரு லஷ்மண் கையும் களவுமாக மாட்டிய பிறகும் அந்த வழக்கு விசாரணையில் ஒருவர் அரசு தரப்பிற்கு எதிர் சாட்சியாகக் கூண்டில் ஏறி பங்காரு லஷ்மணணை எனக்கு 20 வருடமாகத் தெரியும், அவர் மிக நேர்மையாளர், அவர் ஒரு அப்பாவி என்று சொன்னார். அத்தோடு சோடிக்கப்பட்ட இந்த வழக்கிற்குப் பின்னால் காங்கிரஸ் அரசு இருப்பதாகத் திசை திருப்பினார்.

அதற்கென்ன இப்பொழுது? யார் அது அரசிற்கு எதிராகப் பொய் சாட்சி சொன்னவர் என்று கேட்கிறீர்களா?

அரசு தரப்பிற்கு எதிராக உண்மையற்ற சாட்சி சொன்ன அவர் வேறுயாரும் இல்லை.. உன்னத இந்தியக் குடியரசின் தலைவருக்கான போட்டியில் பாரதிய ஜனதாவால் வேட்பாளராக முன்மொழியப்பட்டிருக்கும் “ராம்நாத் கோவிந்த்” தான்.

# குஜராத் கலவரத்திற்குப் பின் ஏற்பட்ட களங்கத்தை மறைக்க ஒரு இஸ்லாமிய வேட்பாளர் தேவைப்பட்டார் அப்பொழுது.. நாடு முழுக்க ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளால் விளைந்த களங்கத்தைப் போக்க இப்பொழுது ஒரு தலித் வேட்பாளர் தேவைப்படுகிறார். அதன் விளைவாக நிகழ்ந்ததே பொய் சாட்சி “ராம்நாத் கோவிந்த்” தேர்வு..