சென்னை:

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் காவல்துறையினரும், பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக காவல்துறைக்கு மர்ம நபர் யாரோ மிரட்டல் கடிதம் எழுதி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் உடடினயாக ஆளுநர் மாளிகைக்கு சென்று வெடிகுண்டு சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு மிரட்டல் கடிதம் போலி என தெரிய வந்தது.

இதையடுத்து,  ஆளுநர் மாளிகைக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்மநபரை போலீஸ் தேடி வருகின்றனர். ஆளுநர் மாளிகைக்கு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.