டில்லி: நீட் தேர்வை எழுத முடியாமல்  தவறவிட்ட மாணவர்களுக்கு, அக்டோபர் .14ம் தேதி மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்தியஅரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.


கொரோனா பொதுமுடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு  கடந்த செப்டம்பர் மாதம் 13ம் தேதி திட்டமிட்டபடி நடைபெற்றது. தொற்று பரவல் நடவடிக்கை காரணமாக சரியான போக்குவரத்து இல்லாததால், ஏராளமான மாணவ மாணவிகள் தேர்வை எழுத முடியாமல் அவதிப்பட்டனர்.  தேர்வுக்கு நாடு முழுவதும்   15.97 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், 85-90 சதவீதம் பேர் மட்டுமே தேர்வுகள் எழுதினார்.  பல மாணவர்களின் பெற்றோர்கள் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்காக மறு தேர்வு நடத்த வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கும் கோரிக்கை விடுத்தனர்.
அதைத்தொடர்ந்து,  நீட் தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில்  பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், மறு தேர்வு நடத்த தேசிய தேர்வுகள் முகமைக்கு உத்தரவிடக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கும், போக்குவரத்து மற்றும் பல்வேறு இடையூறுகள் காரணமாக,  தேர்வை எதிர்கொள்ள முடியாதவர்களுக்கு வரும்  14ம் தேதி தேர்வு நடத்த வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தேர்வு முடிவுகளை அக்டோபர் 16ம் தேதி வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.