சென்னை: தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்களை, சபாநாயகர் அனுமதியின்றி சபைக்குள் திமுக எம்எல்ஏக்கள் எடுத்துச்சென்றது தொடர்பனா வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

தமிழகத்தில் குட்கா, பான்மாசா பொருட்கள் விற்பனை செய்ய தடை உள்ளது. ஆனால், தடையை மீறி கடைகளில் காவல்துறை உதவியுடன் தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.  இதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல எதிர்க்கட்சி தலைவரான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்குள் குட்கா பாக்கெட்டுகளை கொண்டு சென்றனர்.

இது சபையில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து,  அவர்கள்மீது சட்டபேரவை உரிமை குழு நடவடிக்கை எடுத்து, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸ்க்கு எதிராகவும், அதை ரத்து செய்யக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த  2017ம் ஆண்டு  செப்டம்பர் 7ல் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.துரைசாமி, திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பிய உரிமை குழு நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என இடைக்கால உத்தர விட்டார். பின்னர் வழக்கு இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. பின்னர்  ஒத்தி வைக்கப்பட்டது.

அதையடுத்து, கடந்த 3 ஆண்டுகளாக வழக்கு போடப்பட்ட நிலையில், சமீபத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் கடந்த 12,13, 14 ஆகிய நாட்களில் இறுதி விசாரணை நடைபெற்றது. திமுக எம்.எல்.ஏ.க்களாக இருந்த ஜெ.அன்பழகன், கே.பி.பி.சாமி ஆகியோர் மரணமடைந்ததாகவும், திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கு.க.செல்வத்திற்காக நாங்கள் ஆஜராகவில்லை என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றது.

இதையடுத்து,  அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து ஆகஸ்ட் 14ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டது. பின்னர் தீர்ப்பு தேதியும்  ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.